அயோத்தி போலவே மேலும் ஒரு கோவிலில் காணிக்கை திருட்டு: விசாரணைக்கு உத்தரவு

பத்ரிநாத் கோயிலிலும் காணிக்கை முறைகேடு நடைபெற்றதாக சமூக வலைதளங்களில் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
பத்ரிநாத் கோயில்
Published on

டேராடூன்: அயோத்தி ராமர் கோயில் காணிக்கை திருட்டு விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், பத்ரிநாத் கோயிலிலும் காணிக்கை முறைகேடு நடைபெற்றதாக சமூக வலைதளங்களில் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. இதையடுத்து, அந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்த பத்ரிநாத்–கேதார்நாத் கோயில்களின் நிர்வாகக் குழு உத்தரவிட்டுள்ளது.

இதனிடையே, கோயில்களின் தலைமை நிர்வாக அதிகாரி சோஹன் சிங் ரங்கட் கூறுகையில், “விசாரணைக் குழு சேகரிக்கும் ஆதாரங்கள், சிசிடிவி காட்சிகள் மற்றும் சம்பந்தப்பட்டோரின் வாக்குமூலங்கள் அனைத்தும் கமிட்டியிடம் சமர்ப்பிக்கப்படும். குற்றச்சாட்டு உண்மை என உறுதியானால் சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என்றார். மேலும், விசாரணை முடிவுக்கு வரும் வரை உறுதி செய்யப்படாத தகவல்களை பொதுமக்கள் பகிர வேண்டாம் என்றும் அவர் கேட்டுக் கொண்டார். அயோத்தி ராமர் கோயில் காணிக்கை திருட்டு விவகாரம் நாடு முழுவதும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ள சூழலில், பத்ரிநாத் கோயிலையும் சுற்றி இதேபோன்ற குற்றச்சாட்டு எழுந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அயோத்தி ராமர் கோவிலில் நடந்தது என்ன?

உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தி ராமர் கோயில் உண்டியல் பணத்தை எண்ணும்போது அதனைத் திருடியதாக உண்டியல் பணத்தை எண்ணும் பொறுப்பாளர் உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் வீடுகளில் ரெய்டு நடத்தி கோடிக்கணக்கான மதிப்பு சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அவர்களிடம் போலீஸார் விசாரணை நடத்த கோர்ட் அனுமதி கொடுத்துள்ளது. இதையடுத்து கைதானவர்களில் ஒருவரான அவினாஷ் சுக்லா என்பவரிடம் போலீஸார் நடத்திய விசாரணையில், கோடிக்கணக்கான ரூபாயைத் திருடியதை ஒப்புக்கொண்டுள்ளார். அதோடு கோயில் உண்டியல் பணம் எண்ணுவதில் கோயில் டிரஸ்ட் பொருளாளர் அனில் மிஸ்ரா முங்கியப் பங்கு வகித்ததாகவும் சுக்லா தெரிவித்தார். அனில் மிஸ்ரா மற்றும் கோயில் டிரஸ்ட் செயலாளர் சம்பத் ராய் ஆகிய இரண்டு பேரும் கடந்த வாரம் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர். இந்த புகார் தொடர்பாக விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழுவையும் உத்தர பிரதேச அரசு அமைத்துள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com