இங்கு வேலையே கிடையாது, இட ஒதுக்கீடு வேலையை உறுதி செய்யாது - நிதின் கட்காரி

இங்கு வேலையே கிடையாது, இட ஒதுக்கீடு ஒன்றும் வேலையை உறுதி செய்யாது என மத்திய மந்திரி நிதின் கட்காரி கூறியுள்ளார்.
இங்கு வேலையே கிடையாது, இட ஒதுக்கீடு வேலையை உறுதி செய்யாது - நிதின் கட்காரி
Published on

புதுடெல்லி,

மராட்டியத்தில் கல்வி, வேலைவாய்ப்பில் 16 சதவீத இடஒதுக்கீடு கேட்டு கடந்த ஒரு வாரத்துக்கு மேலாக நடந்து வரும் மராத்தா சமுதாயத்தினரின் தீவிர போராட்டம் வன்முறை களமாக மாறியது. தற்கொலை செய்து கொள்ளும் சம்பவம் நடைபெற்று வருகிறது.

இதற்கிடையே ஆகஸ்ட் 9-ம் தேதி முதல் போராட்டம் மீண்டும் தொடங்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனை குறிப்பிடும் விதமாக பேசிய மத்திய மந்திரி நிதின் கட்காரி, இட ஒதுக்கீடு வழங்கப்பட்டாலும், இங்கு வேலை கிடையாது. தகவல் தொழில்நுட்பம் உதவியால் வங்கிகளில் வேலை குறைந்து விட்டது. அரசு ஆட்சேர்ப்பும் குறைந்திருக்கிறது. எல்லோரும் நாங்கள் பிற்படுத்தப்பட்டோர் என்கிறார்கள். பீகார் மற்றும் உத்திரப்பிரதேச மாநிலங்களில் பிராமணர்கள் அதிகமாக உள்ளனர், அவர்கள் அரசியலிலும் ஆதிக்கம் செலுத்துகிறார்கள். இருப்பினும் அவர்கள் தங்களை பிற்படுத்தப்பட்டோர் என்றே கூறுகிறார்கள், என்று கூறியுள்ளார்.

எந்த மதமாகவோ இருக்கலாம், ஜாதியாகவோ இருக்கலாம், அனைத்து சமூதாயத்திலும் உடுத்த உடையும், உண்ண உணவும் இல்லாத மக்கள் இருக்கதான் செய்கிறார்கள் என கூறியுள்ள நிதின் கட்காரி, பொதுமக்களின் பொருளாதார நிலையை கவனத்தில் கொண்டு இடஒதுக்கீடு வழங்கப்படலாம் என்றும் குறிப்பிட்டுள்ளார். மராட்டியத்தில் உள்ள நிலையை சரிசெய்ய முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் பேச்சுவார்த்தையை நடத்த வேண்டும், பொதுமக்கள் அமைதியை காக்க வேண்டும் என்றும் கோரிக்கையை விடுத்துள்ளார் நிதின் கட்காரி.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com