

பெங்களூரு:
கொரோனா விதிமுறைகள் புறக்கணிக்கப்படுவதாகவும், பொதுக்கூட்டங்கள், போராட்டங்களுக்கு எந்த கட்டுப்பாடுகளும் இல்லை என கர்நாடக அரசுக்கு ஐகோர்ட்டு நீதிபதி கண்டனம் தெரிவித்தார்
கர்நாடகத்தில் அரசியல் கட்சிகள் சார்பில் நடைபெறும் பொதுக்கூட்டங்கள், பேரணிகள், போராட்டங்களில் கொரோனா விதிமுறைகள் மீறப்படுவதாகவும், இதற்கு ஏற்பாடு செய்பவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை என்று கூறியும் கர்நாடக ஐகோர்ட்டில் வக்கீல் கீதா மற்றும் ஒரு தனியார் நிறுவனம் பொதுநல மனு தாக்கல் செய்திருந்தது. அந்த மனு மீதான விசாரணை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி ஏ.எஸ். ஓகா முன்னிலையில் நேற்று முன்தினம் விசாரணை நடைபெற்றது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான வக்கீல், பொதுக்கூட்டங்களில் விதிமுறைகளை மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுவதாக கூறினார்.
அப்போது குறுக்கீட்ட தலைமை நீதிபதி ஏ.எஸ். ஓகா, பொதுக்கூட்டங்கள், போராட்டங்கள் நடத்த அரசு எந்த விதமான கட்டுப்பாடும் விதிக்கப்படவில்லை. பொதுக்கூட்டங்களில் கலந்து கொள்பவர்கள் கொரோனா விதிமுறைகளை பின்பற்றுவதில்லை. அவர்களுக்கு அபராதம் விதித்தால் மட்டும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முடியுமா?. பொதுக்கூட்டங்களுக்கு ஏற்பாடு செய்பவர்களுக்கு அபராதம் விதிப்பதுடன், வழக்குப்பதிவு செய்யாமல் இருப்பது ஏன்?. அதுகுறித்து அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என்று நீதிபதி அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.