

மும்பை,
மராட்டியத்தில் அடுத்த மாதம் (அக்டோபர்) 11-ந்தேதி நவராத்திரி பண்டிகை தொடங்க உள்ள நிலையில், 'கர்பா' எனப்படும் நடன நிகழ்ச்சிகளில் இஸ்லாமியர்கள் பங்கேற்க விசுவ இந்து பரிஷத் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. கர்பா மற்றும் தாண்டியா நடன அரங்குகளில் முஸ்லிம்கள் பங்கேற்க அனுமதிக்கக்கூடாது என்று விழா ஏற்பாட்டாளர்களை அந்த அமைப்பு வலியுறுத்தியது.
இதற்கு மராட்டிய பா.ஜ.க. மந்திரி நிதேஷ் ரானே ஆதரவு தெரிவித்தார். அவர் கூறுகையில்,"நவராத்திரி திருவிழாக்காலங்களில் 'லவ் ஜிகாத்' வழக்குகள் அதிகரிக்க வாய்ப்புள்ளது. எனவே, உருவ வழிபாட்டை பின்பற்றாத பிற மதத்தினர் யாரும் இந்துக்களின் இந்த வழிபாட்டு நிகழ்ச்சிகளில் பங்கேற்கக்கூடாது" என்று கூறினார்.
இந்நிலையில், விஷ்வ இந்து பரிஷத் மற்றும் பா.ஜ.க. மந்திரியின் கருத்துக்கு முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிசின் மனைவி அம்ருதா பட்னாவிஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "பண்டிகைகள் அனைவரையும் உள்ளடக்கியதாகத்தான் இருக்கவேண்டும். இஸ்லாமியர்கள் அங்கு வந்து விழாவை சரியாக கொண்டாடி மகிழ்ந்தால் அதில் எனக்கு எந்த தவறும் தெரியவில்லை" என்று கூறினார்.
அம்ருதா பட்னாவிசின் கருத்துக்கு உத்தவ் சிவசேனா கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத் வரவேற்பு தெரிவித்துள்ளார். நாக்பூரில் அவர் இது குறித்து செய்தியாளர்களிடம் கூறுகையில், "கர்பா நிகழ்ச்சிகளில் இஸ்லாமியர்கள் பங்கேற்பதை வரவேற்ற அம்ருதா பட்னாவிஸ், அவரது கணவர் தேவேந்திர பட்னாவிசுக்கும், அவரது மந்திரி சபையில் உள்ள இந்துத்வா ஆதரவாளர்களுக்கும் புத்திமதி சொல்ல வேண்டும். இந்தியாவின் விடுதலை போராட்டத்திலும், மராட்டிய மாநில உருவாக்கத்திலும் முஸ்லிம் சமூகத்திற்கு பெரிய பங்களிப்பு உள்ளது" என்றார்.