சுட்டெரிக்கும் வெயிலில் பலகட்ட தேர்தல் கூடாது - நிதிஷ் குமார் யோசனை

சுட்டெரிக்கும் வெயிலில் பலகட்ட தேர்தல் நடத்தக்கூடாது என்று நிதிஷ் குமார் யோசனை தெரிவித்துள்ளார்.
சுட்டெரிக்கும் வெயிலில் பலகட்ட தேர்தல் கூடாது - நிதிஷ் குமார் யோசனை
Published on

பாட்னா,

நாடாளுமன்றத்துக்கு நேற்று இறுதிக்கட்ட தேர்தல் நடந்தது. பீகார் மாநில தலைநகர் பாட்னாவில் கவர்னர் மாளிகையில் உள்ள பள்ளிக்கூடத்தில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடியில் முதல்-மந்திரி நிதிஷ் குமார் ஓட்டு போட்டார்.

பிறகு அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

நான் நீண்டகால அனுபவம் உள்ளவன். அந்த அடிப்படையில் ஒரு யோசனை சொல்கிறேன். இதுபோன்ற சுட்டெரிக்கும் வெயிலில் இப்படி நீண்டகால தேர்தலை நடத்துவது சரியல்ல. அதிலும் ஒவ்வொரு கட்டத்துக்கும் இடையே நிறைய இடைவெளி உள்ளது.

நான் ஏராளமான பொதுமக்களிடம் பேசி உள்ளேன். முடிந்த அளவுக்கு குறைவான கட்டங்களில் தேர்தலை நடத்த வேண்டும். பிப்ரவரி-மார்ச் மாதங்களிலோ அல்லது அக்டோபர்-நவம்பர் மாதங்களிலோ தேர்தலை நடத்தலாம்.

நாங்கள் கொளுத்தும் வெயிலில் தேர்தல் பிரசார கூட்டங்களை நடத்தினோம். மக்களும் அதை சகித்துக்கொண்டு கூட்டங்களில் கலந்து கொண்டனர். இப்போது வாக்களிக்கும்போதும் வாக்குச்சாவடிகளில் வெயிலில் நின்றபடி அவர்கள் வாக்களிக்க வேண்டி இருக்கிறது.

இதுதொடர்பாக விவாதிக்க அனைத்து கட்சி கூட்டம் நடத்த வேண்டும். நானும் இதுகுறித்து பல்வேறு கட்சி தலைவர்களுக்கு கடிதம் எழுதப் போகிறேன். இவ்விஷயத்தில் கருத்து ஒற்றுமை ஏற்படுத்த வேண்டும்.

பா.ஜனதா வேட்பாளரான பெண் சாமியார் பிரக்யா சிங் தாக்குர், கோட்சேவை தேசபக்தர் என்று கூறியதை பற்றி கேட்கிறீர்கள். இதை நாமெல்லாம் சகித்துக் கொள்ள முடியாது. அவரை நீக்குவது பற்றி பா.ஜனதா பரிசீலிக்க வேண்டும். இருப்பினும், இது அக்கட்சியின் உள்கட்சி விவகாரம்.

குற்றம், ஊழல், வகுப்புவாதம் ஆகிய பிரச்சினைகளில் நாங்கள் சமரசம் செய்து கொள்ள முடியாது. எங்கள் நிலைப்பாடு தெளிவானது.

பிரதமர் மோடி, இறுதிக்கட்ட வாக்குப்பதிவுக்கு முன்பு கேதார்நாத் கோவிலுக்கு சென்றதை அரசியல் ஆக்க வேண்டாம். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com