

புதுடெல்லி,
மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து பஞ்சாப் மற்றும் ஹரியாணாவைச் சேர்ந்த விவசாயிகள், 'டெல்லி சலோ' போராட்டத்தை 4 நாட்களாகத் தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா விவசாயிகளிடம் இன்று ஒரு வேண்டுகோளை முன்வைத்தார். அதில் ''டெல்லியில் போராட்டம் நடத்தும் விவசாயிகள் புராரி மைதானத்துக்குச் சென்ற பிறகு, டிசம்பர் 3ஆம் தேதி பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்றும் பனிக்காலத்தில் விவசாயிகள் பெரும் சிரமங்களை எதிர்கொள்வதால் அவர்களுக்குத் தேவையான வசதிகள் புராரி மைதானத்தில் செய்யப்பட்டுள்ளன. அதனால் அவர்கள் அங்கே செல்ல வேண்டும்'' என்றும் அமித் ஷா கேட்டுக்கொண்டார்.
இந்த நிலையில் விவசாயிகளுடனான பேச்சுவார்த்தையை உடனடியாக நடத்த வேண்டும் என்று டெல்லி சுகாதாரத்துறை மந்திரி சத்யேந்திர ஜெயின் கேட்டுக்கொண்டுள்ளார்.
இது குறித்து டெல்லி சுகாதாரத்துறை மந்திரி சத்யேந்திர ஜெயின் பேசியதாவது:-
விவசாயிகளுடன் பேச்சுவார்த்தைக்கு எந்த நிபந்தனையும் இருக்கக்கூடாது. பேச்சுவார்த்தை உடனடியாக நடத்தப்பட வேண்டும். அவர்கள் நம் நாட்டின் விவசாயிகள் என்பதால், அவர்கள் விரும்பும் இடத்தில் தங்கள் போராட்டத்தை நடத்த அனுமதிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.