திருப்பரங்குன்றம் தீபம் ஏற்றும் விவகாரம்: மேல்முறையீட்டு மனுக்கள் மீது 3-ந்தேதி சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை

திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றும் விவகாரம் தொடர்பான மேல்முறையீட்டு மனுக்கள் 3-ந்தேதி சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வருகின்றன.
சுப்ரீம் கோர்ட்டு
கோப்புப்படம்
Published on

புதுடெல்லி,

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றலாம் என்று மதுரை ஐகோர்ட்டு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தீர்ப்பு கூறினார். இந்த தீர்ப்புக்கு எதிராக தமிழக அரசு சார்பில் மதுரை ஐகோர்ட்டு டிவிஷன் பெஞ்சில் மேல்முறையீடு செய்துள்ளனர்.

இதேபோல மலை உச்சியில் உள்ள தர்கா தரப்பிலும், மேலும் சில தனிநபர்கள் சார்பிலும் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு இருந்தன. இந்த மனுக்கள் அனைத்தையும் நீதிபதிகள் ஜெயச்சந்திரன், ராமகிருஷ்ணன் ஆகியோர் விசாரித்து தீர்ப்பு கூறினர். அதில் பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டன.

இந்த நிபந்தனைகளை எதிர்த்து ராம ரவிக்குமார் சார்பில் வக்கீல் ஜி.பாலாஜி சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார். அதில், 'சென்னை ஐகோர்ட்டின் உத்தரவு பக்தர்களின் நலன்களுக்கு எதிராக உள்ளது. தீபம் ஏற்ற குறிப்பாக ஏற்கனவே உறுதி செய்யப்பட்ட கோவிலின் உரிமையில் தலையிடுவதாக உள்ளது. எனவே ஐகோர்ட்டு உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும்' என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதேபோல் தமிழ்நாடு அரசின் சார்பில் வக்கீல் பி.கருணாகரனும் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார். அதில் ஐகோர்ட்டு தீர்ப்புக்கு இடைக்கால தடை விதிக்கவும், அந்தத் தீர்ப்புக்கு முன்பு பின்பற்றப்பட்ட நடைமுறையின்படியே கார்த்திகை தீபத் திருவிழாவை நடத்த அனுமதி வழங்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த மனுக்களை நீதிபதிகள் அர்விந்த் குமார், வி.எம். பஞ்சோலி ஆகியோர் அடங்கிய அமர்வு வருகிற ஆகஸ்ட் 3-ந்தேதி விசாரிக்கிறது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com