மக்களை வறுமையில் தள்ளி இந்த அரசு வரலாறு படைக்கிறது -பிரியங்கா காந்தி தாக்கு

மக்களை வறுமையில் தள்ளி இந்த அரசு வரலாறு படைத்து வருகிறது என்று பிரியங்காகாந்தி குற்றம்சாட்டியுள்ளார்.
மக்களை வறுமையில் தள்ளி இந்த அரசு வரலாறு படைக்கிறது -பிரியங்கா காந்தி தாக்கு
Published on

புதுடெல்லி,

தேசிய புள்ளியியல் துறை வெளியிட்டுள்ள 2017-18 ம் ஆண்டுக்கான நுகர்வோர் செலவின ஆய்வறிக்கையில் மக்களின் வாங்கும் சக்தி (நுகர்வோர் செலவினம்) கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகவும் குறைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த ஜூன் மாதமே வெளியிட வேண்டிய இந்த ஆய்வறிக்கை அதன் சாதக, பாதக அம்சங்கள் காரணமாக வெளியிடப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து மத்திய புள்ளியியல் துறை கூறுகையில், 2017-18 ஆம் ஆண்டு நுகர்வோர் செலவு ஆய்வு அறிக்கையில் திரட்டப்பட்ட புள்ளி விவரங்களில் பல்வேறு குறைகள் இருப்பதால் அந்த ஆய்வு அறிக்கை வெளியிட வேண்டாம் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்கு பதிலாக 2020-2021, மற்றும் 2021-2022 ஆம் ஆண்டில் தனியாக நுகர்வோர் செலவு தொடர்பாக சர்வே செய்யப்பட்டு வெளியிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், உத்தர பிரதேச மாநில காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி டுவிட்டர் பதிவில் கூறியதாவது:-

இந்தியாவில் நுகர்வோர்கள் செலவு செய்யும் அளவு சீர்குலைந்துவிட்டது. மக்களின் ஏழ்மையைப் போக்கவும், அவர்களுக்கு அதிகாரம் அளிக்கவும் சுதந்திரத்துக்குப் பின் அடுத்தடுத்து வந்த அரசாங்கங்கள் தொடர்ந்து அயராது பாடுபட்டுள்ளன. ஆனால் தற்போது ஆளும் மத்திய அரசு மக்களை ஏழ்மைக்குள் தள்ளுகிறது. மக்களை வறுமையில் தள்ளி இந்த அரசு வரலாறு படைத்து வருகிறது.

தங்களின் கார்ப்பரேட் நண்பர்கள் நாள்தோறும் பணக்காரர்கள் ஆவதை பாஜக உறுதி செய்து வருகிறது என அதில் பதிவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com