மைசூரு ஐ.டி. வளாகத்திற்குள் புகுந்த சிறுத்தைப் புலி… தேடுதல் வேட்டை தீவிரம்

இன்போசிஸ் நிறுவன வளாகத்திற்குள் புகுந்த சிறுத்தைப் புலியை மீட்கும் நடவடிக்கையை வனத்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

மைசூரு,

மைசூரில் செயல்பட்டு வரும் இன்போசிஸ் நிறுவனத்தின் வளாகத்திற்குள் இன்று அதிகாலை சிறுத்தைப் புலி ஒன்று காணப்பட்டதையடுத்து, வனத்துறையினர் அதை மீட்டும் பணியை மேற்கொண்டு வருகின்றனர்.

கர்நாடக மாநிலம் மைசூருவில் அமைக்கப்பட்டுள்ள இன்போசிஸ் தொழில்நுட்ப நிறுவனத்தின் வளாகம் அருகே ரிசர்வ் வனப்பகுதி உள்ளது. இதனால் அங்கிருந்து சில விலங்குகள் அவ்வப்போது இன்போசிஸ் நிறுவன வளாகத்திற்குள் புகுவது வழக்கம். அந்த வகையில் இன்று அதிகாலை சுமார் 3.30 மணியளவில் சிறுத்தைப் புலி ஒன்று வளாகத்திற்குள் புகுந்தது. இதையடுத்து வனத்துறையினருக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து சிறுத்தைப் புலி தென்பட்ட இடத்தில் வனத்துறையினர் தீவிர தேடுதல் வேட்டை மேற்கொண்டனர். இருப்பினும் சிறுத்தைப் புலியை உடனடியாக கண்டுபிடிக்கப்படவில்லை. பாதுகாப்பு நடவடிக்கையாக இன்று மட்டும் பணியாளர்கள் வீட்டிலிருந்து பணியாற்றுமாறு (Work From Home) இன்போசிஸ் நிறுவனம் கேட்டுக் கொண்டுள்ளது. இதன்படி சிறுத்தைப் புலி கண்டுபிடிக்கப்படும் வரையில் வளாகத்திற்குள் யாரும் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் 50 பேர் கொண்ட வனத்துறையினர் அடங்கிய குழு ஒன்று இன்போசிஸ் வளாகத்திற்குள் முகாமிட்டு சிறுத்தைப் புலியை மீட்கும் நடவடிக்கையை தற்போது மேற்கொண்டு வருகின்றனர்.

சிறுத்தைப் புலியை பிடிக்க கூண்டுகள் மற்றும் வலைகள் தயார் நிலையில் உள்ளன என்றும் சிறுத்தையை கண்டுபிடிக்க டிரோன்களும் பயன்படுத்தப்பட்டு வருவதாக மூத்த வன அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com