

புதுடெல்லி,
வேளாண் மசோதாக்களை எதிர்ப்பவர்கள்தான் விவசாயிகளுக்கு எதிரானவர்கள் என்று உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள வேளாண் மசோதாக்களுக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்த மசோதாக்கள் விவசாயிகளுக்கு எதிரானது எனக்கூறி எதிர்க்கட்சிகள் போராட்டத்தில் குதித்துள்ளன.
ஆனால், இந்த விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் பொய்பிரசாரம் செய்வதாக பிரதமர் மோடி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். இந்த நிலையில், இவ்விவகாரம் குறித்து உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறுகையில், எதிர்க்கட்சிகள் மக்களை தவறாக வழிநடத்துகின்றனர், அவர்கள் வெற்றி பெற அனுமதிக்க மாட்டோம். விவசாய மசோதாக்களை எதிர்ப்பவர்கள்தான் விவசாயிகளுக்கு எதிரானவர்கள்.கடினமான காலங்களில் மக்களோடு மக்களாக இருப்பவர்கள்தான் அதிகாரத்தில் இருக்க முடியும்.
கடந்த 6 மாதங்களாக அரசு இலவசமாக உணவு தானியங்களை 12 முறை வழங்கியுள்ளது, யாரும் பசியால் வாடக்கூடாது என்பதுதான் லட்சியம். வரவிருக்கும் இடைத்தேர்தலில் பெரிய ஊர்வலம், பேரணி, பொதுக்கூட்டங்கள் இருக்காது. ஒவ்வொரு சாவடியிலும் பாஜக நிர்வாகிகள், தொண்டர்கள் பொறுப்பு எடுத்துக் கொள்வார்கள். வாக்குச்சாவடியை வென்றால் தேர்தலில் வெல்ல முடியும் என்றார்.