3 மாணவிகள் மீது ஆசிட் வீச்சு: தேர்வு எழுத வந்தபோது விபரீதம்

பொதுத்தேர்வு எழுத வந்த மாணவிகள் மீது இளைஞர் ஒருவர் ஆசிட் வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
3 மாணவிகள் மீது ஆசிட் வீச்சு: தேர்வு எழுத வந்தபோது விபரீதம்
Published on

பெங்களூரு,

பொதுத்தேர்வு எழுத வந்த மாணவிகள் மீது இளைஞர் ஒருவர் ஆசிட் வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கர்நாடகா மாநிலத்தில் தற்போது பியூசி எனப்படும் பொதுத்தேர்வு நடைபெற்று வருகிறது. இதற்காக மாணவ, மாணவிகள் தயாராகி வருகின்றனர். இந்தநிலையில் தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு நகரின் கடபா பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் தேர்வெழுத காலை முதல் மாணவிகள் வந்துக்கொண்டிருந்தனர்.

அப்போது கேரளாவை சேர்ந்த அபின் என்ற இளைஞர், கல்லூரி வளாகத்தில் தேர்வுக்காக காத்துக்கொண்டிருந்த மாணவி ஒருவர் மீது திடீரென ஆசிட்டை வீசினார். அந்த ஆசிட் அருகில் இருந்த 2 மாணவிகள் மீதும் பட்டது. இதனால் அவர்களும் பாதிக்கப்பட்டனர். மாணவிகள் மீது ஆசிட் வீசி விட்டு தப்பி ஓட முயன்ற இளைஞரை பார்த்த அப்பகுதி மக்கள் அவரை துரத்திச் சென்று பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட 3 மாணவிகளை அங்கிருந்தவர்கள் உடனடியாக மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அதில் ஒரு மாணவி கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 

காதலை ஏற்க மறுத்ததால் மாணவி மீது ஆசிட் வீசியதாக இளைஞரிடம் நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்படும் என போலீசார் தரப்பில் கூறப்படுகிறது. கல்லூரி மாணவர் போல் உடையணிந்து, சந்தேகம் வராதவாறு கல்லூரி வளாகத்திற்குள் நுழைந்துள்ளதாகவும் அங்கு மாணவிகள் தேர்வுக்காக காத்துக்கொண்டிருந்தபோது, மாணவிகள் மீது ஆசிட்டை வீசிவிட்டு தப்பியோட முயன்றதாகவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்லூரி வளாகத்தில் தேர்வுக்காக காத்துக் கொண்டிருந்த மாணவிகள் மீது ஆசிட் வீசப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com