

ஸ்ரீநகர்,
ஜம்மு காஷ்மீரின் அனந்தநாக் மாவட்டத்தில் உள்ள ஹகுரா பகுதியில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, பாதுகாப்பு படையினர் சம்பவ இடத்தை சுற்றி வளைத்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது, அங்கு மறைந்து இருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். உடனே சுதாரித்துக்கொண்ட பாதுகாப்பு படையினர் பதில் தாக்குதல் நடத்தினர். இரு தரப்பினருக்கும் இடையே நீடித்த இந்த துப்பாக்கிச்சண்டையில், மூன்று பயங்கரவாதிகள் சுட்டுகொல்லப்பட்டனர்.
சுட்டுக்கொல்லப்பட்டவர்களில் இருவரின் அடையாளம் தெரிந்ததுள்ளது. மூன்றாவது பயங்கரவாதியை அடையாளம் காணும் பணி நடைபெற்று வருகிறது. சுட்டுக்கொல்லப்பட்ட பயங்கரவாதிகளிடம் இருந்து ஏகே 47 துப்பாக்கிகள், பிஸ்டல்கள், கையெறி குண்டுகள் உள்ளிட்ட ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன. இந்த துப்பாக்கிச்சண்டையில் பாதுகாப்பு படை தரப்பில் யாருக்கும் எந்த சேதமும் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுட்டுக்கொல்லப்பட்ட பயங்கரவாதிகளில் ஒருவன், கடந்த சில தினங்களுக்கு முன் ஸ்ரீநகரில் உள்ள சவுரா என்ற இடத்தில் இருந்த போலீஸ் நிலைகள் மீது நடைபெற்ற தாக்குதலில் தொடர்புடையவன் என பாதுகாப்பு படையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஜம்மு காஷ்மீரில், பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. காஷ்மீர் பல்கலைகழங்களில் நடைபெற இருந்த தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.