நிர்பயா வழக்கு : மூன்று குற்றவாளிகளுக்கு இறுதி வாய்ப்பு

நிர்பயா வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டவர்களுக்கு கருணை மனு அளிக்க இறுதி வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
நிர்பயா வழக்கு : மூன்று குற்றவாளிகளுக்கு இறுதி வாய்ப்பு
Published on

புதுடெல்லி,

டெல்லியில் கடந்த 2012 ஆம் வருடம் ஓடும் பேருந்தில் 23 வயது பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட வழக்கில் 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

அவர்களில் 18 வயதுக்கு கீழ் இருந்த நபர் சீர்த்திருத்த பள்ளிக்கு அனுப்பப்பட்டு 3 வருடங்களுக்கு பிறகு விடுதலை செய்யப்பட்டார். மற்றொரு குற்றவாளியான ராம் சிங், டெல்லி திகார் சிறையில் வைத்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

மற்ற நான்கு பேருக்கும் தூக்கு தண்டனை விதித்து உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அவர்களில் ஒருவரான அக்ஷய் குமார் சிங், தீர்ப்பை மறுபரிசீலனை செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் அளித்த மனு கடந்த வாரம் தள்ளுபடி செய்யப்பட்டது.

இந்நிலையில் மீதம் உள்ள மூன்று பேரும் கருணை மனு அளிப்பது குறித்து, அவர்களின் கருத்தை தெரிந்து கொள்ள நோட்டீஸ் ஒன்றை வழங்குமாறு திகார் சிறை அதிகாரிகளுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியது.

அதன்படி முகேஷ், பவன், வினய் ஆகிய மூன்று பேருக்கும் இது குறித்து அறிவிக்கப்பட்டது. மேலும் அவர்கள் கருணை மனு அளிக்க அவர்களுக்கு 7 நாட்கள் அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.

இதனை பயன்படுத்தி அவர்கள் ஜனாதிபதியிடம் கருணை மனு அளிக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது அவர்களுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை ரத்து செய்ய வழங்கப்படும் கடைசி வாய்ப்பாகும்.

X

Daily Thanthi
www.dailythanthi.com