

ஸ்ரீநகர்,
ஜம்மு காஷ்மீர் மாநிலம் பாராமுல்லா மாவட்டத்தில் உள்ள ஹந்த்வாரா பகுதியில் நேற்றிரவு பாதுகாப்பு படையினர் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது, அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதையடுத்து, பாதுகாப்பு படையினரும் பதில் தாக்குதல் நடத்தினர்.
சில மணி நேரம் நீடித்த இந்த சண்டையில் மூன்று பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்படதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த துப்பாக்கிச்சண்டையின் போது, பொதுமக்களில் ஒருவரும் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. துப்பாக்கிச்சண்டை நிறைவு பெற்றுவிட்டதாகவும், தொடர்ந்து அப்பகுதியில் வேறு பயங்கரவாதிகள் பதுங்கியுள்ளார்களா? என்று பாதுகாப்பு படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதற்கிடையே, ஹந்த்வாரா, சோபார், பரமுல்லா, குப்வாரா ஆகிய பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இணையதள சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது