

பாட்னா,
பீகார் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதற்கிடையில் கனமழை காரணமாக அசாம், மேகாலயா மற்றும் பீகார் மாநிலங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்நிலையில் பீகார் மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் பெய்த இடியுடன் கூடிய மழைக்கு 22 பேர் பலியாகியுள்ளதாக மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;-
அடுத்த மூன்று நாட்களுக்கு அசாம். மேகாலயா, அருணாச்சல பிரதேசம், பிகார், இமயமலைப் பகுதியை ஒட்டியுள்ள மேற்கு வங்காளம் மற்றும் சிக்கிம் ஆகிய மாநிலங்களுக்கு கனமழை முதல் மிக கனமழைக்கான எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. வெள்ள பாதிப்பு ஏற்படும் வாய்ப்பும் உள்ளதால் நாங்கள் ஏற்கனவே மத்திய மற்றும் மாநில அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளோம்.
ஏற்கனவே பிகாரில் கடந்த 24 மணி நேரத்தில் இடியுடன் கூடிய மழைக்கு 22 பேர் பலியாகியுள்ளதாக மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது. பலியானவர்களில் பெரும்பாலானோர் வயல்வெளிகளில் வேலை செய்து கொண்டிருந்தவர்கள்தான் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் பிகார் மாநில அரசு, கனமழை காரணமாக தாழ்வான பகுதிகளுக்கு வெள்ள அபாயம் இருப்பதால், தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்குமாறு மாவட்ட நிர்வாகங்களுக்கு அறிவுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.