

பெங்களூரு:
மறைந்த நடிகர் புனித் ராஜ்குமார் கடைசியாக நடித்த கந்ததகுடி படம் கடந்த அக்டோபர் மாதம் 30-ந் தேதி வெளியானது. அது கர்நாடகத்தில் உள்ள திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடுகிறது. இந்த நிலையில் அனைத்து தரப்பினரும் அந்த படத்தை பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தில் அதன் கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து நடிகர் புனித் ராஜ்குமாரின் மனைவி அஸ்வினி புனித் ராஜ்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கந்ததகுடி சினிமா புனித் ராஜ்குமாரின் ஒரு கனவு படம். கர்நாடகத்தின் வன வளம் மற்றும் இயற்கை அழகை கன்னடர்களுக்கு காட்ட வேண்டும் என்பது அவரது எண்ணமாக இருந்தது. கன்னடர்கள் அனைவரும் இந்த படத்தை பார்க்க வேண்டும் என்று அவர் நினைத்தார். அதிலும் குழந்தைகள் பார்க்க வேண்டும் என்று அவர் விரும்பினார். அந்த நோக்கத்தில் நான் பட குழுவினருடன் ஆலோசித்து, வினியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்கு உாமையாளர்களின் ஒத்துழைப்புடன் குறைந்த டிக்கெட் கட்டணத்தை நிர்ணயித்துள்ளோம். அதாவது நாளை (இன்று) முதல் வருகிற 10-ந் தேதி வரை ஒரு திரையரங்கு மட்டும் உள்ள தியேட்டர்களில் கட்டணமாக ரூ.56-ம், மல்டிபிளக்ஸ் திரையரங்கில் ரூ.112-ம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கர்நாடகம் முழுவதும் அந்த நாட்களில் அனைத்து காட்சிகளையும் கந்ததகுடி படத்தை திரையிட முடிவு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.