டெல்லி நிஜாமுதீன் கூட்டத்தில் கலந்து கொண்டவர்களில் 441 பேருக்கு கொரோனா அறிகுறி- அரவிந்த கெஜ்ரிவால்

டெல்லி நிஜாமுதீன் கூட்டத்தில் கலந்து கொண்டவர்களில் 441 பேருக்கு கொரோனா அறிகுறி இருப்பதாக டெல்லி முதல் மந்திரி அரவிந்த கெஜ்ரிவால் தெரிவித்து உள்ளார்.
படம்: ANI
படம்: ANI
Published on

புதுடெல்லி

தெற்கு டெல்லியின் நிஜாமுதீன் பகுதியில் உள்ள தப்லிகி ஜமாத்தின் தலைமையகமான அலமி மார்க்காஸ் பங்களேவாலி மஸ்ஜித்தில் இந்த மாத தொடக்கத்தில் நடந்த கூட்டத்தில் நாடு முழுவதும் இருந்து சுமார் 8,000 பேர் கலந்து கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இங்கு இருந்து ஆயிரகணக்கானவர்கள் வெளியேற்றப்பட்டு உள்ளனர்.

இந்த விவகாரம் குறித்து டெல்லி முதல் மந்திரி அரவிந்த கெஜ்ரிவால் கூறியதாவது:-

கொரோனா வைரஸின் சமூக பரவல் கட்டத்தில் டெல்லி நுழையவில்லை. உள்ளூர் பரிமாற்றங்கள் கட்டுப்பாட்டுக்குள் உள்ளன.

இந்த விவகாரத்தில் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்ய டெல்லி அரசு துணை நிலை ஆளுநருக்கு கடிதம் எழுதி உள்ளது, அவர் விரைவில் உத்தரவு பிறப்பிப்பார் என்று நான் நம்புகிறேன். எந்தவொரு அதிகாரிகளிடமும் ஏதேனும் அலட்சியம் காணப்பட்டால் அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்.

"மார்காஸிலிருந்து 24 கொரோனா பாதிப்புகள், 41 வெளிநாட்டு பயணிகள், 22 வெளிநாட்டு பயணிகளின் நெருங்கிய உறவினர்கள் உட்பட 97 பேரை நாங்கள் ஆய்வு செய்துள்ளோம். நிலைமை கட்டுப்பாட்டில் உள்ளது, சமூக பரிமாற்றம் இல்லை

நவராத்திரி விழா நடக்கிறது, ஆனால் கோவில்களில் யாரும் இல்லை, குருத்வாரக்கள் காலியாக உள்ளன, மக்கா காலியாக உள்ளது, வாட்டிகான் நகரம் காலியாக உள்ளது. இந்த நோய்களில் இருந்து வளர்ந்த நாடுகளைக் கூட காப்பாற்ற முடியவில்லை, இதுபோன்ற சூழ்நிலையில் நாம் பொறுப்பற்ற முறையில் செயல்பட்டால், எங்களுக்கு பிரச்சினைகள் அதிகரிக்கும் என கூறினார்.

நிஜாமுதீன் விவகாரம் குறித்து மேலதிக விபரங்களை அளித்த முதல் மந்திரி மொத்தம் 1,548 பேர் மார்க்கஸிலிருந்து வெளியே கொண்டு வரப்பட்டுள்ளனர், அவர்களில் 441 பேருக்கு கொரோனா அறிகுறிகள் இருக்கிறது. நாங்கள் அவர்களை மருத்துவமனைகளுக்கு மாற்றியுள்ளோம், அவர்களுக்கு சோதனைகள் நடத்தப்படுகின்றன. அறிகுறிகளைக் காட்டாத 1,107 பேர் தனிமைப்படுத்தலுக்கு அனுப்பப்பட்டுள்ளனர், என்று அவர் கூறினார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com