

புதுடெல்லி:
ஓலா, உபர் உள்ளிட்ட கேப் சேவை நிறுவனங்கள், பயணத்தை தொடங்குவதற்கு முன்பாக ஓட்டுநர்களுக்கு ‘டிப்ஸ்’ வழங்கும் வசதியை நிறுத்த வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக நுகர்வோர் விவகாரத்துறை செயலாளர் நிதி காரே கூறுகையில், பயணம் முன்பதிவு செய்யப்படுவதற்கு முன்பே ஓட்டுநருக்கு டிப்ஸ் வழங்குமாறு பயணிகளிடம் கேட்பது தவறான நடைமுறை என்றும், இது நுகர்வோருக்கு நியாயமற்ற வர்த்தக நடைமுறையாக இருப்பதாகவும் தெரிவித்தார்.
மேலும் அவர் கூறியதாவது: தேசிய நுகர்வோர் உதவி மையத்துக்கு கேப் நிறுவனங்கள் தொடர்பாக ஏராளமான புகார்கள் வந்துள்ளன. குறிப்பாக, சவாரியை முன்பதிவு செய்யும்போதே டிப்ஸ் வழங்கும் வசதி அறிமுகப்படுத்தப்படுவதாகவும், டிப்ஸ் வழங்காவிட்டால் சவாரி கிடைக்காது என்ற எண்ணம் பயணிகளுக்கு ஏற்படுத்தப்படுவதாகவும் புகார்கள் வந்துள்ளன.இதுபோன்ற நடைமுறை நுகர்வோரை தவறாக வழிநடத்துவதாகவும், நியாயமற்ற வர்த்தக நடைமுறையாக இருப்பதாகவும் விசாரணைக்குப் பிறகு கண்டறியப்பட்டதால், முன்கூட்டியே டிப்ஸ் கேட்கும் வசதியை நிறுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
பயணிகள் ஓட்டுநர்களுக்கு டிப்ஸ் வழங்குவதற்கு மத்திய அரசு தடை விதிக்கவில்லை. டிப்ஸ் வழங்குவது முழுமையாக பயணிகளின் விருப்பமாக இருக்க வேண்டும்.ஆனால், பயணம் முடிந்த பிறகே டிப்ஸ் வழங்கும் வசதி இருக்க வேண்டும். பயணம் கிடைப்பதற்கான வாய்ப்பை அதிகரிக்கும் அல்லது விரைவாக சவாரி உறுதி செய்யப்படும் என்ற எண்ணத்தை ஏற்படுத்தும் வகையில் முன்கூட்டியே கூடுதல் தொகையை செலுத்துமாறு பயணிகளிடம் கேட்கக்கூடாது” என்றார்.
இந்த நடவடிக்கைக்கு முன்னதாக, ரேபிடோ நிறுவனத்தை நடத்தும் ராப்பன் டிரான்ஸ்போர்ட்டேஷன் சர்வீசஸ் நிறுவனத்துக்கு மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் ரூ.10 லட்சம் அபராதம் விதித்தது.சவாரி உறுதி செய்யப்படுவதற்கு முன்பே பயணிகளை கூடுதல் தொகை செலுத்த தூண்டும் வகையிலான நடைமுறைகள், தவறான விளம்பரங்கள் மற்றும் ‘டார்க் பேட்டர்ன்ஸ்’ எனப்படும் நுகர்வோரை குறிப்பிட்ட முடிவை எடுக்கத் தூண்டும் செயல்முறைகள் உள்ளிட்டவை தொடர்பாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதனிடையே, ஓலா மற்றும் உபர் நிறுவனங்களின் வர்த்தக நடைமுறைகள் குறித்தும் மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் விசாரணை நடத்தி வருவதாக நிதி காரே தெரிவித்தார்.