கிரகணம் முடிந்ததை தொடர்ந்து திருப்பதி ஏழுமலையான் கோவில் நடை திறப்பு

சந்திர கிரகணத்தால் திருப்பதி ஏழுமலையான் கோவில் 11½ மணி நேரம் மூடப்பட்டது.
கிரகணம் முடிந்ததை தொடர்ந்து திருப்பதி ஏழுமலையான் கோவில் நடை திறப்பு
Published on

திருப்பதி,

வானியல் நிகழ்வான சந்திர கிரகணம் நேற்று இரவு 9.50 மணியில் இருந்து அதிகாலை 1.31 மணி வரை நிகழ்ந்தது. சந்திர கிரகணத்தை முன்னிட்டு கோவில்கள் நடை அடைக்கப்பட்டு கிரகண சாந்தி பூஜைகள் நடத்தப்பட்டபின்னரே ஒவ்வொரு முறையும் நடை திறக்கப்பட்டு வருகிறது. அதன்படி பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சந்திரகிரகணத்தையொட்டி கோவில் கதவுகள் நேற்று மாலை 3.30 மணிக்கு பாரம்பரிய முறைப்படி மூடப்பட்டன.

இதற்கான அறிவிப்பு ஏற்கனவே வெளியிடப்பட்டு பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவது நிறுத்தப்பட்டது. கிரகணம் முடிந்ததை தொடர்ந்து 11 மணி நேரத்துக்கு பின்னர் இன்று அதிகாலை 3 மணி அளவில் நடை திறக்கப்பட்டது. கோவில் கதவுகள் மூடும்போது கோவில் தலைமை அர்ச்சகர்கள், துணை அதிகாரி லோகநாதன், அன்னப்பிரசாதத்துறை துணை அதிகாரி ராஜேந்திரா, பறக்கும் படை அதிகாரி சுரேந்திரா மற்றும் பலர் உடனிருந்தனர்.

கோவிலுக்கு வெளியே திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் பி.ஆர்.நாயுடு நிருபர்களிடம் கூறுகையில், சந்திர கிரகணத்தை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை (நேற்று) மாலை 3 மணிக்கு சுத்தி மற்றும் பிற மத சடங்குகளுக்குப் பிறகு திருப்பதி ஏழுமலையான் கோவில் கதவுகள் சம்பிரதாய முறைப்படி மூடப்பட்டன.

தொடர்ந்து திங்கட்கிழமை (இன்று) அதிகாலை 3 மணிக்கு மீண்டும் கோவில் நடை திறக்கப்பட்டு, கோவில் வளாகம் முழுவதும் தூய தண்ணீரால் சுத்தம் செய்யப்பட்டு பூஜைகள் தொடர்கிறது. தொடர்ந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர், எனக் கூறினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com