திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிப்ரவரி மாதம் உண்டியல் வருமானம் ரூ.79.34 கோடி

பிப்ரவரி மாதம் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 10 லட்சத்து 95 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனா.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிப்ரவரி மாதம் உண்டியல் வருமானம் ரூ.79.34 கோடி
Published on

திருமலை,

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். அப்போது அவர்கள் உண்டியலில் காணிக்கை செலுத்துகிறார்கள். அதேபோன்று வேண்டுதலை நிறைவேற்ற முடி காணிக்கையும் செலுத்தி வருகிறார்கள்.

கொரோனா தொற்று பரவலுக்கு முன்பு திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினமும் சராசரியாக 70 ஆயிரத்தில் இருந்து 80 ஆயிரம் பக்தர்களும், வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமை என வார நாட்களில் 80 ஆயிரத்தில் இருந்து 95 ஆயிரம் பக்தர்களும், வைகுண்ட ஏகாதசி, பிரம்மோற்சவம் போன்ற விழா நாட்களில் ஒரு லட்சத்தில் இருந்து 2 லட்சம் வரை பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வந்தனர்.

கொரோனா பரவல் நேரத்தில் கடும் கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு குறைந்த எண்ணிக்கையில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதித்தனர். கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது திருமலை-திருப்பதி தேவஸ்தானம் சாதாரணப் பக்தர்களுக்கு இலவச தரிசனத்தைத் தொடங்கி உள்ளது. சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், தற்போது உண்டியல் வருமானமும் அதிகரித்துள்ளது.

கடந்த பிப்ரவரி மாதம் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 10 லட்சத்து 95 ஆயிரத்து 724 பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். உண்டியல் வருமானமாக ரூ.79 கோடியே 34 லட்சம் கிடைத்தது. 5 லட்சத்து 35 ஆயிரம் பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தி உள்ளனர். 13 லட்சத்து 63 ஆயிரம் பக்தர்களுக்கு அன்னப்பிரசாதம் வழங்கப்பட்டுள்ளது.

சாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்களுக்கு 1 லட்சத்து 64 ஆயிரம் அறைகள் ஒதுக்கீடு செய்து பதிவு செய்யப்பட்டுள்ளது. 27.76 லட்சம் யூனிட் மின்சாரம் பயன்படுத்தப்பட்டுள்ளது. பக்தர்களுக்கு 64 லட்சத்து 90 ஆயிரம் லட்டுகள் வினியோகம் செய்யப்பட்டுள்ளது. 3 ஆயிரத்து 378 ஸ்ரீவாரி சேவா சங்க தொண்டர்கள் பக்தர்களுக்கு சேவை செய்துள்ளனர்.

மேற்கண்ட தகவலை திருமலை-திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com