

திருப்பதி,
ஆந்திர மாநிலம் திருப்பதியில் சாமி சிலையை திருடிய மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
ஆந்திரப்பிரதேசம் மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு பக்தர்கள் வாகனங்கள் மூலமாகவும், மலைப்பாதைகள் வழியாக நடைபயணமாகவும் செல்வது வழக்கம். நடைபயணமாக செல்லும் பக்தர்கள், மலைப்பாதைகளில் உள்ள சின்ன சின்ன தெய்வ சிலைகளை வழிபட்டு செல்வர்.
முதல் மலைப்பாதையின் 7-வது மைல் அருகே சிறிய அனுமன் சிலை அமைந்துள்ளது. நேற்று (செவ்வாய்க்கிழமை) நள்ளிரவில் சாமி கும்பிடுவது போல வந்து ஒருவர், அந்த சிலையை திருடி சென்றுவிட்டார். அனுமன் சிலை காணாமல் போனதை அறிந்து அதிர்ச்சியடைந்த மக்கள் திருப்பதி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். முதற்கட்ட விசாரணையாக அந்த பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்தனர். ஆய்வில் அனுமன் கற்சிலையை ஒருவர் திருடிச் சென்றதை அறிந்தனர்.
இதையடுத்து சிலையை திருடி சென்ற மர்ம நபரை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.