

கொல்கத்தா,
பாஜக தேசிய துணைப்பொதுச்செயலாளராக செயல்பட்டு வந்த முகுல் ராய் நேற்று திரிணாமுல் காங்கிரசில் இணைந்தார்.
67 வயதான முகுல் ராய் 1998 ஆம் ஆண்டு வரை காங்கிரஸ் கட்சியில் இருந்தார். பின்னர் காங்கிரசில் இருந்து விலகிய அவர் திரிணாமுல் காங்கிரசில் இணைந்தார்.
1998 முதல் திரிணாமுல் காங்கிரசில் இருந்துவந்த முகுல் ராய் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்தது. மேலும், இவர் சில பாஜக தலைவர்களையும் சந்தித்தார்.
இதனால், 2015 ஆம் ஆண்டு முகுல் ராயை திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இருந்து 6 ஆண்டுகள் நீக்குவதாக மம்தா பானர்ஜி அறிவித்தார். இதனை தொடர்ந்து 2017 ஆம் ஆண்டு முகுல் ராய் திரிணாமுல் காங்கிரசில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார். அவருக்கு பாஜக தேசிய துணைப்பொதுச்செயலாளர் பதவி வழங்கப்பட்டது. மேலும், அவருக்கு மத்திய பாதுகாப்பு படையின் இசட் பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டு வந்தது.
இதற்கிடையில், முகுல் ராய் நேற்று திரிணாமுல் காங்கிரசில் இணைந்தார். திரிணாமுல் காங்கிரசில் இணைந்த முகுல் ராய்க்கு அக்கட்சியின் துணைப்பொதுச்செயலாளர் பதவி வழங்கப்பட உள்ளது.
இந்நிலையில், பாஜகவில் இருந்து விலகி திரிணாமுல் காங்கிரசில் இணைந்துள்ள முகுல் ராய் தனக்கு வழங்கப்பட்டு வரும் மத்திய பாதுகாப்புபடையினரை திரும்பப்பெற்றுக்கொள்ளுமாறு உள்துறை அமைச்சகத்திற்கு கடிதம் எழுதியுள்ளார்.
இதனை தொடர்ந்து மத்திய அரசு சார்பில் முகுல் ராய்க்கு வழங்கப்பட்டு வரும் பாதுகாப்பு விரைவில் நிறுத்தப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. அதன் பின்னர் மேற்குவங்காள மாநில அரசு சார்பில் முகுல் ராய்க்கு இசட் பிரிவு பாதுகாப்பு வழங்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.