பட்டாவில் பெயர் மாற்றம் செய்ய விவசாயியிடம் ரூ.30 ஆயிரம் லஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி கைது

சிவமொக்காவில் பட்டாவில் பெயர் மாற்றம் செய்ய ரூ.30 ஆயிரம் லஞ்சம் வாங்கிய துணை தாசில்தார் உள்பட 2 பேரை லோக் அயுக்தா போலீசார் கைது செய்தனர்.
பட்டாவில் பெயர் மாற்றம் செய்ய விவசாயியிடம் ரூ.30 ஆயிரம் லஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி கைது
Published on

சிவமொக்கா

பட்டாவில் பெயர் மாற்ற...

சிவமொக்கா (மாவட்டம்) தாலுகா கியாத்தினகொப்பா கிராமத்தை சேர்ந்தவர் சிவராஜ். இவர் தனது விவசாய நிலத்தின் பட்டாவில் பெயர் மாற்ற முடிவு செய்தார்.

இதற்கு சிவராஜ் ஹோளலூர் கிராம நிர்வாக அலுவலகத்திற்கு சென்றார். அங்கு துணை தாசில்தார் பரமேஸ்வர்நாயக் என்பரிவடம் பட்டாவில் பெயர் மாற்ற விண்ணப்பம் செய்தார்.

அப்போது பரமேஸ்வர்நாயக் பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்றால் ரூ.40 ஆயிரம் லஞ்சம் தரும்படி கூறினார். அப்போது சிவராஜ் தன்னிடம் அவ்வளவு பணம் இல்லை என்று கூறினார். இதையடுத்து ரூ.30 ஆயிரம் தரும்படி பரமேஸ்வர்நாயக் கூறினார். இதற்கு சிவராஜ் ஒப்பு கொண்டார்.

லோக் அயுக்தாவிடம் புகார்

இதற்கிடையில் சிவராஜ் இதுகுறித்து லோக் அயுக்தா போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து லோக் அயுக்தா போலீசார் சிவராஜிற்கு அறிவுரை வழங்கி, ரசாயனம் தடவிய ரூ.30 ஆயிரத்தை கொடுத்தனுப்பினர்.

இதையடுத்து சிவராஜ் கிராம நிர்வாக அதிகாரிகள் அலுவலகத்திற்கு சென்று துணை தாசில்தார் பரமேஸ்வர்நாயக் மற்றும் உதவியாளர் பிரகாசை சந்தித்து ரூ.30 ஆயிரத்தை வழங்கினார். அப்போது அங்கு மறைந்திருந்த லோக் அயுக்தா போலீசார் விரைந்து வந்து பரமேஸ்வர்நாயக் மற்றும் அவரது உதவியாளர் பிரகாசை மடக்கி பிடித்து கைது செய்தனர்.

கைது

இதையடுத்து அவர்களிடம் இருந்த ரூ.30 ஆயிரத்தை பறிமுதல் செய்த லோக் அயுக்தா போலீசார், 2 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com