

புதுடெல்லி,
இந்திய சுதந்திர போராட்டத்தின் போது வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் பங்கு மிகவும் முக்கியமானது ஆகும். இந்த இயக்கம் துவங்கப்பட்டதன் 75-வது ஆண்டு விழா இன்று கொண்டாடப்பட்டது.
இதையடுத்து பாராளுமன்றத்தில், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பேசியதாவது:- சுதந்திர போராட்டத்தின் போது ஜவஹர்லால் நேரு பல ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்தார். காங்கிரஸ் கட்சியினர் பலர் சிறையில் உயிரிழந்தனர். போராட்டக்காரர்கள் மீது பல்வேறு கொடுமைகள் அரங்கேற்றப்பட்டன.
ஆனால், ஒருவர் கூட தங்கள் நிலைப்பாட்டில் இருந்து பின்வாங்கவில்லை. வெள்ளையனே வெளியேறு இயக்கத்துக்கு சில இயக்கங்கள் எதிர்ப்பு தெரிவித்ததை நாம் மறக்க கூடாது. அந்த இயக்கங்களுக்கு சுதந்திர போராட்டத்தில் எந்த பங்கும் இல்லை. பிரித்தாளும் அரசியல் உள்ளது. சுதந்திரத்தை நாம் பேணிக்காத்தால் பிரித்தாளும் அரசியலில் ஈடுபடும் சக்திகளை நாம் தோற்கடித்துவிடலாம்.
தற்போது மதச்சார்பின்மையும் சுதந்திரமும் அபாய கட்டத்தில் உள்ளது. பிரிவினைவாத சக்திகள் வெற்றி பெற நாங்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். அமைதியான வளர்ச்சி நோக்கிய தேசத்திற்காக நமது தலைவர்கள் அரும்பாடு பட்டனர் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். ஆனால், வன்முறை மற்றும் வெறுப்பு உணர்வு தற்போது உள்ளது. எனவே, நமது முன்னோர்களின் தியாகத்தை மனதில் கொண்டு முன்னோக்கி செல்ல வேண்டும் இவ்வாறு அவர் தெரிவித்தார்.