டோக்கியோ ஒலிம்பிக்: வெண்கலம் வென்ற பஜ்ரங் பூனியாவுக்கு ஜனாதிபதி, பிரதமர் வாழ்த்து

டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கல பதக்கம் வென்ற மல்யுத்த வீரர் பஜ்ரங் பூனியாவுக்கு ஜனாதிபதி மற்றும் பிரதமர் வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.
டோக்கியோ ஒலிம்பிக்: வெண்கலம் வென்ற பஜ்ரங் பூனியாவுக்கு ஜனாதிபதி, பிரதமர் வாழ்த்து
Published on

டோக்கியோ,

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில், ஆடவர் ஃபிரீஸ்டைல் மல்யுத்த போட்டியின் 65 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் பஜ்ரங் பூனியா மற்றும் கஜகஸ்தானின் தவுலத் நியாஜ்பெகோவ் வெண்கல பதக்கத்திற்கான போட்டியில் இன்று விளையாடினர்.

இதில், 8-0 என்ற புள்ளி கணக்கில் பூனியா வெற்றி பெற்றுள்ளார்.

நேற்று அஜர்பைஜானின் ஹாஜி அலியேவ் உடன் அரையிறுதியில் விளையாடி 5-12 என்ற கணக்கில் பூனியா தோல்வி அடைந்த நிலையில், இன்று வெற்றி பெற்றுள்ளார். இதற்கு முன் நடந்த காலிறுதி போட்டியில் பூனியா, ஈரானின் மோர்தசா கியாசி செகாவை வீழ்த்தினார். இதனால் இந்தியாவுக்கு மற்றொரு வெண்கல பதக்கம் கிடைத்துள்ளது.

வெற்றி பெற்ற பஜ்ரங் பூனியாவுக்கு ஜனாதிபதி மற்றும் பிரதமர் டுவிட்டர் வழியே வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.

இதுபற்றி ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், இந்திய மல்யுத்த போட்டியில் ஒரு சிறப்பு தருணம்.

டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கல பதக்கம் வென்றதற்காக பஜ்ரங் பூனியாவுக்கு வாழ்த்துகள்.

பல ஆண்டுகளாக களைப்பில்லா முயற்சிகள், நிலைத்தன்மை மற்றும் உறுதி தன்மை ஆகியவற்றுடன் தனித்தன்மைமிக்க மல்யுத்த வீரராக நீங்கள் உங்களை தனித்துவப்படுத்தி உள்ளீர்கள். ஒவ்வோர் இந்தியனும் உங்களது வெற்றியின் மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்கின்றனர் என தெரிவித்து உள்ளார்.

இதேபோன்று பிரதமர் மோடியும் பூனியாவுக்கு வாழ்த்து தெரிவித்து கொண்டதுடன், ஒவ்வொரு இந்தியனையும் பெருமை மற்றும் மகிழ்ச்சி அடைய செய்துள்ளீர்கள் என தெரிவித்து உள்ளார்.

பஜ்ரங் பூனியாவிடம் தொலைபேசி வழியே பேசிய பிரதமர் மோடி, வெண்கலம் வென்றதற்கு தனது வாழ்த்துகளையும் தெரிவித்து கொண்டார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com