தேக்கடி ஏரி பகுதியில் உலா வந்த புலி: கண்டுகளித்த சுற்றுலா பயணிகள்

தேக்கடி ஏரியில் படகு சவாரி செய்யும்போது ஏரிக்கரைக்கு வரும் காட்டு யானை, காட்டெருமை, மான் உள்ளிட்ட வனவிலங்குகளை சுற்றுலா பயணிகள் நேரில் கண்டு ரசிப்பது வழக்கம்.
தேக்கடி ஏரி பகுதியில் உலா வந்த புலியை சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி
புலி
Published on

இடுக்கி,

தேக்கடி ஏரிக்கு படகு சவாரி சென்ற சுற்றுலா பயணிகளுக்கு இன்ப அதிர்ச்சி தரும் வகையில், ஏரிக்கரையில் புலி கம்பீரமாக நடந்து சென்ற அரிய காட்சி அரங்கேறியுள்ளது.

தேக்கடி ஏரி

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில், தமிழக எல்லையை ஒட்டி புகழ்பெற்ற தேக்கடி ஏரி அமைந்துள்ளது. இங்கு தமிழகம், ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு வெளிமாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இந்த நிலையில், 3 நாள் தொடர் விடுமுறையையொட்டி தேக்கடியில் வழக்கத்தை விட சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியது.

மிரண்டு ஓடிய காட்டெருமைகள்

தேக்கடி ஏரியில் படகு சவாரி செய்யும்போது ஏரிக்கரைக்கு வரும் காட்டு யானை, காட்டெருமை, மான் உள்ளிட்ட வனவிலங்குகளை சுற்றுலா பயணிகள் நேரில் கண்டு ரசிப்பது வழக்கம். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு, சுற்றுலா பயணிகள் ஏற்றிய படகு ஒன்று மணக்கவல பகுதியில் சென்று கொண்டிருந்தது. அப்போது ஏரிக்கரையோரம் மேய்ந்து கொண்டிருந்த காட்டெருமைகள் திடீரென பயந்து மிரண்டு ஓடின.

கம்பீரமாக உலா வந்த புலி

காட்டெருமைகள் மிரண்டு ஓடுவதை கண்ட படகு ஊழியர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள், ஏதேனும் வனவிலங்கு வருகிறதா என பார்க்க படகை ஏரியிலேயே நிறுத்தி காத்திருந்தனர். அப்போது, அனைவரையும் ஆச்சரியப்படுத்தும் வகையில் ஏரியை கடந்து வந்த பெரிய புலி ஒன்று, கரையோரம் இருந்த பாறை மீது ஏறி கம்பீரமாக நடந்து சென்றது.

சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி

நேரில் காண்பது மிகவும் அரிதான நிலையில், நீண்ட இடைவெளிக்கு பிறகு புலியை நேரில் பார்த்த சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியடைந்து, அந்த காட்சியை ஆர்வத்துடன் ரசித்தனர். மேலும், சிலர் தங்களது செல்போன்களில் புலியின் நடமாட்டத்தை படம் பிடித்து, சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். இந்த காட்சிகள் தற்போது வைரலாகி வருகின்றன.

X

Daily Thanthi
www.dailythanthi.com