‘டிராக்டர் பேரணியை மாற்றுப்பாதையில் நடத்த முடியாது’ - போலீஸ் யோசனையை விவசாய அமைப்புகள் நிராகரிப்பு

குடியரசு தினத்தன்று டெல்லியில் டிராக்டர் பேரணியை மாற்றுப்பாதையில் நடத்துமாறு போலீஸ் தெரிவித்த யோசனையை விவசாய அமைப்புகள் நிராகரித்தன.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

புதுடெல்லி,

வேளாண் சட்டங்களை எதிர்த்து 40-க்கு மேற்பட்ட விவசாய அமைப்புகள், 56 நாட்களாக டெல்லி எல்லையில் போராட்டம் நடத்தி வருகின்றன. தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி, குடியரசு தினத்தன்று டெல்லியில் டிராக்டர் பேரணி நடத்தப்போவதாக அறிவித்துள்ளன.

இந்த பேரணிக்கு இடைக்கால தடை விதிக்கக்கோரி, டெல்லி போலீஸ் மூலமாக, சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு மனு தாக்கல் செய்தது.

ஆனால், இது போலீஸ் முடிவு எடுக்க வேண்டிய பிரச்சினை என்று சுப்ரீம் கோர்ட்டு கூறியதால், மனுவை மத்திய அரசு வாபஸ் பெற்றுக்கொண்டது.

இந்தநிலையில், டிராக்டர் பேரணி குறித்து விவசாய சங்கங்களின் தலைவர்களுடன் போலீசார் நேற்று ஆலோசனை நடத்தினர். டெல்லி விஞ்ஞான் பவனில் இக்கூட்டம் நடந்தது. டெல்லி, உத்தரபிரதேசம், அரியானா ஆகிய மாநிலங்களின் உயர் போலீஸ் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

டிராக்டர் பேரணி நடத்த திட்டமிடப்பட்டுள்ள டெல்லி வெளிவட்டச்சாலை, நெரிசல் மிகுந்த பகுதிகள் வழியாக செல்வதால், குண்ட்லி-மானேசர்-பால்வால் விரைவுச்சாலை வழியாக பேரணி நடத்துமாறு போலீஸ் தரப்பு யோசனை தெரிவித்தது.

ஆனால், விவசாய சங்க தலைவர்கள் அதை ஏற்க மறுத்து விட்டனர். இதனால் முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளது.

இன்று (வியாழக்கிழமை) மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெற வாய்ப்புள்ளதாக பேச்சுவார்த்தையில் பங்கேற்ற விவசாய சங்க தலைவர் ஒருவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com