

மும்பை
மராட்டியத்தில் 4 மாடி கட்டிடம் இடிந்து விழுந்ததில் 10 பேர் பலியானார்கள். 4 பேர் மீட்கப்பட்டனர்.
மராட்டியத்தில், தானே மாவட்டம் பிவண்டி பாலாஜி நகரில் 'கோகினூர்' என்ற 4 மாடி குடியிருப்பு கட்டிடம் உள்ளது. இதில் 48 வீடுகள் இருந்தன. கடந்த 2020-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் இந்த கட்டிடம் ஆபத்தான நிலையில் இருப்பதாக மாநகராட்சியால் கண்டறியப்பட்டது. எனினும் கட்டிடத்தில் பொதுமக்கள் வசித்து வந்தனர். கடந்த 5-ந் தேதி கட்டிடவாசிகளை காலி செய்ய மாநகராட்சி நோட்டீஸ் வழங்கியது. மேலும் கட்டிட குடிநீர் இணைப்பு, மின் வினியோகம் துண்டிக்கப்பட்டது.
நேற்று முன்தினம் இரவு 9 மணியளவில் திடீரென கட்டிடத்தின் தூணில் பயங்கர சத்தத்துடன் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதை அறிந்து பதறிய குடியிருப்புவாசிகள் பலர் அவசர அவசரமாக கட்டிடத்தைவிட்டு வெளியேறினர். பழுது பார்க்கும் பணியில் ஈடுபட்டவர்கள் யார் கூறுவதையும் கேட்காமல் தொடர்ந்து பணியில் ஈடுபட்டதாக தெரிகிறது. இதேபோல சில குடும்பத்தினரும் வீடுகளில் இருந்து உள்ளனர்
இந்த நிலையில் இரவு 11.20 மணியளவில் கட்டிடத்தின் ஒரு பகுதி திடீரென பயங்கர சத்தத்துடன் இடிந்து விழுந்தது. கட்டிடத்தில் இருந்தவர்கள் இடிபாடுகளில் சிக்கி உயிரோடு புதைந்தனர். தகவல் அறிந்து போலீசார், தீயணைப்பு படையினர், தேசிய பேரிடர் மீட்பு படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர். விடிய, விடிய நடந்த மீட்பு பணி நேற்று 2-வது நாளாக நடந்தது. இதில் 4 பேர் இடிபாடுகளில் இருந்து உயிருடன் மீட்கப்பட்டனர்.
எனினும், இந்த சம்பவத்தில் 10 பேர் பலியானார்கள். அவர்களின் உடல்கள் மீட்கப்பட்டன. மேலும் 3 பேர் இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. எனவே அவர்களை தேடும் பணி நேற்று இரவு வரை நீடித்தது. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.