

ஸ்ரீநகர்,
காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் கடந்த 2016ம் ஆண்டு ஜூலையில் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுண்டரில் ஹிஜ்புல் முஜாகிதீன் அமைப்பின் தளபதியான புர்ஹான் வானி சுட்டு கொல்லப்பட்டார்.
இதனை தொடர்ந்து காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில் இன்று பொது வேலை நிறுத்தத்திற்கு பிரிவினைவாத அமைப்புகள் அழைப்பு விடுத்துள்ளன. இதனால் பயணிகள் பாதுகாப்பினை முன்னிட்டு ரெயில் சேவை இன்று ரத்து செய்யப்பட்டு உள்ளது.
இதனால் ஸ்ரீநகர்-பத்காம் மற்றும் வடகாஷ்மீரின் பாராமுல்லா ஆகிய பகுதிகளுக்கு ரெயில்கள் இயக்கப்படாது. இதேபோன்று தெற்கு காஷ்மீரின் ஜம்மு பகுதியில் பத்காம்-ஸ்ரீநகர்-அனந்த்நாக்-குவாஜிகண்ட் பகுதியில் இருந்து பனிஹால் செல்லும் ரெயில் சேவையும் தற்காலிக ரத்து செய்யப்பட்டு உள்ளது.
காஷ்மீரில் இந்த ஜூலையில் ரெயில் சேவை ரத்து செய்யப்படுவது இது 2வது முறை ஆகும். கடந்த காலங்களில் கல் வீச்சுகள் மற்றும் பிற போராட்டங்களால் ரெயில்கள் பலத்த சேதமடைந்தன.
தேச விரோத செயல்களுக்காக துக்தர்-இ-மிலாத் அமைப்பின் தலைவியான ஆசியா அந்த்ரபி மற்றும் அவரது 2 உதவியாளர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர். அவர்களை தேசிய பாதுகாப்பு கழகம் புதுடெல்லிக்கு கொண்டு செல்ல முடிவு செய்தது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பிரிவினைவாதிகள் நேற்று ஒரு நாள் பொது வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்திருந்தன. இந்நிலையில், இன்று 2வது நாளாக பொது வேலை நிறுத்தம் தொடருகிறது.