பழங்குடி அமைச்சக நிதி ஒதுக்கீடு 45 சதவீதம் அதிகரிப்பு

பழங்குடி அமைச்சக நிதி ஒதுக்கீடு 45 சதவீதம் அதிகரித்துள்ளது.
பழங்குடி அமைச்சக நிதி ஒதுக்கீடு 45 சதவீதம் அதிகரிப்பு
Published on

புதுடெல்லி,

பிரதமர் மோடி தலைமையில் மத்தியில் 3-வது முறையாக ஆட்சியமைத்துள்ள தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் 2-வது பட்ஜெட் மீது மிகப்பெரும் எதிர்பார்ப்பு நிலவி வந்தது. இந்த நிலையில், 2025-26-ம் நிதியாண்டுக்கான இந்த பட்ஜெட்டை நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் நேற்று தாக்கல் செய்தார்.

பல்வேறு அறிவிப்புகள், திட்டங்கள், சலுகைகள் என ஜனரஞ்சகமாக தயாரிக்கப்பட்டிருந்த இந்த பட்ஜெட்டில் இடம்பெற்றிருந்தன. ரூ.12 லட்சம் வரை ஆண்டு வருமானம் உள்ளவர்களுக்கு, இனி வருமான வரி இல்லை. மேலும் அளிக்கப்பட்டு இருக்கும் சலுகைகள் மூலம் 36 வகையான உயிர்காக்கும் மருந்துகள், மின்சார வாகனங்கள், செல்போன்களின் விலைகளும் குறைய வாய்ப்பு இருக்கிறது.

இந்த நிலையில், மத்திய பட்ஜெட்டில் மத்திய பழங்குடியினர் அமைச்சகத்துக்கு ரூ.14 ஆயிரத்து 925 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கடந்த பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட ரூ.10 ஆயிரத்து 237 கோடியுடன் ஒப்பிடுகையில், நிதி ஒதுக்கீடு 45 சதவீதம் அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் பழங்குடியினர் பகுதிகளில் உள்கட்டமைப்பு வசதிகளை அதிகரிப்பதற்காக நிதி ஒதுக்கீடு உயர்த்தப்பட்டுள்ளது. இதில், பழங்குடியின மாணவர்களுக்கு தரமான கல்வி அளிக்கும் ஏகலைவா மாதிரி உள்ளுறை பள்ளிகளுக்கான ஒதுக்கீடு, ரூ.4 ஆயிரத்து 748 கோடியில் இருந்து ரூ.7 ஆயிரத்து 88 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com