டெல்லி தேர்தலில் ஆம் ஆத்மி கட்சிக்காக பிரசாரம் செய்யவுள்ள திரிணாமுல் காங்கிரஸ்

70 உறுப்பினர்களை கொண்ட டெல்லி சட்டசபைக்கான தேர்தல் வரும் 5-ந்தேதி நடைபெற உள்ளது.
புதுடெல்லி,
70 உறுப்பினர்களை கொண்ட டெல்லி சட்டசபைக்கான தேர்தல் பிப்ரவரி 5-ந்தேதி நடைபெற உள்ளது. பிப்ரவரி 8-ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்படும். இந்த தேர்தலில், ஆளும் ஆம் ஆத்மி. காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க. என 3 முக்கிய கட்சிகள் மும்முனை போட்டியை ஏற்படுத்தி உள்ளன. தேர்தல் நடைபெற இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், பல்வேறு கட்சியினர் டெல்லியில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். மூன்றாவது முறையாக ஆட்சியை பிடிக்க ஆம் ஆத்மி கட்சி தீவிரம் காட்டி வருகிறது.
இதற்கிடையே, இந்த தேர்தலில் ஆம் ஆத்மி கட்சிக்கு ஆதரவு அளிப்பதாக திரிணாமுல் காங்கிரஸ், சமாஜ் வாதி கட்சி, சிவசேனா மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சி (சரத் பவார் பிரிவு) ஏற்கனவே தெரிவித்திருந்தது.
இந்நிலையில், டெல்லியில் ஆம் ஆத்மி கட்சிக்காக திரிணாமுல் காங்கிரஸ் கட்சி பிரசாரம் மேற்கொள்ள உள்ளது. வரும் 31ம் தேதி முதல் டெல்லியின் பூர்வாஞ்சல் ஆதிக்கம் செலுத்தும் பகுதிகளில் திரிணாமுல் காங்கிரசின் நாடாளுமன்ற உறுப்பினர் சத்ருகன் சின்ஹா பிரசாரம் மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சமாஜ் வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், அரவிந்த் கெஜ்ரிவாலுடன் இணைந்து வரும் 30ம் தேதி டெல்லியின் ரிதாலா தொகுதியில் வாகன பேரணியில் ஈடுபட உள்ளார்.






