திரிணாமூல் காங். கட்சியின் சின்னம் முடக்கம்: சுப்ரீம் கோர்ட்டில் மம்தா பானர்ஜி முறையீடு

அக்டோபர் 6-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் நிலையில், இந்த விவகாரம் மேற்கு வங்காள அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மம்தா பானர்ஜி
Published on

புதுடெல்லி,

மேற்கு வங்காளத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் பெயர் மற்றும் சின்னத்தை தேர்தல் ஆணையம் தற்காலிகமாக முடக்கியதை எதிர்த்து, கட்சியின் நிறுவனர் மம்தா பானர்ஜி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் ஏற்பட்ட பிளவை தொடர்ந்து, மம்தா பானர்ஜி தலைமையிலான அணியும், ரிதப்ரதா பானர்ஜி தலைமையிலான மற்றொரு அணியும் கட்சியின் பெயர் மற்றும் சின்னத்துக்கு உரிமை கோரி வந்தன.இந்த விவகாரத்தை விசாரித்த தேர்தல் ஆணையம், இறுதி முடிவு எடுக்கும் வரை ‘அனைத்திந்திய திரிணாமுல் காங்கிரஸ்’ என்ற பெயரையும், கட்சியின் இரட்டை மலர் சின்னத்தையும்’ இரு அணிகளும் பயன்படுத்த தற்காலிக தடை விதித்தது.

சட்டவிரோதமானது

மேலும், அக்டோபர் 6-ந் தேதி நடைபெற உள்ள நந்திகிராம், ரெஜினகர் உள்ளிட்ட இடைத்தேர்தல்களில் இரு அணிகளும் தனித்தனி பெயர் மற்றும் சின்னங்களில் போட்டியிட வேண்டும் என்றும் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. இதையடுத்து, தேர்தல் ஆணையத்தின் உத்தரவை எதிர்த்து மம்தா பானர்ஜி சுப்ரீம் கோர்ட்டை அணுகியுள்ளார். தேர்தல் ஆணையத்தின் இந்த இடைக்கால உத்தரவு சட்டவிரோதமானது என்றும், கட்சியின் பெயர் மற்றும் சின்னத்தை பயன்படுத்தும் உரிமையை பறிக்க முடியாது என்றும் அவர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘கால்பந்து வீரர்

இதற்கிடையே, இரு அணிகளும் தேர்தல் ஆணையத்திடம் தங்களுக்கு விருப்பமான புதிய பெயர்கள் மற்றும் சின்னங்களை சமர்ப்பித்தன. மம்தா பானர்ஜி தலைமையிலான அணிக்கு ‘மம்தா அனைத்திந்திய திரிணாமுல் காங்கிரஸ்’ என்ற பெயரும், ‘கால்பந்து வீரர்’ சின்னமும் ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மற்றொரு அணிக்கு ‘ஜனநாயக திரிணாமுல் காங்கிரஸ்’ என்ற பெயரும், ‘ கடிதஉறை’ சின்னமும் ஒதுக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 6-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் நிலையில், இந்த விவகாரம் மேற்கு வங்காள அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com