

அவுரங்கபாத்,
முத்தலாக் மசோதா முஸ்லீம் மக்களுக்கு எதிரான சதி எனவும், முஸ்லீம் ஆண்களை தண்டிப்பதற்கான தந்திரமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட இருப்பதாக ஓவைசி குற்றம் சாட்டியுள்ளார். அவுரங்கபாத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய ஓவைசி மத்திய அரசை கடுமையாக விமர்சித்தார்.
ஓவைசி மேலும் கூறியதாவது:- பத்மாவத் படத்துக்கு சர்ச்சை எழுந்த போது இது குறித்து ஆய்வு செய்ய குழு ஒன்று அமைக்கப்பட்டது. ஆனால், முத்தலாக் மசோதா விவகாரத்தில் இது போன்ற எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. முத்தலாக் மசோதா முஸ்லீம் சமூகத்துக்கு எதிரான சதி ஆகும். முத்தலாக் மசோதா முஸ்லீம் பெண்களை வீதிக்கு வர வழைத்து ஆண்களை சிறைக்கு அனுப்பும் தந்திரமாகும் என்றார். அதேவேளையில், விவாகரத்துக்கு உடனடி முத்தலாக் வழியை தேர்வு செய்பவர்களை சமுதாய ரீதியில் முஸ்லீம்கள் புறக்கணிக்க வேண்டும் என்றார்.
மேலும் பாரதீய ஜனதாவை விமர்சித்த ஓவைசி, பிரதமர் மோடி நாட்டுக்கு எதுவுமே செய்யவில்லை. பிறரால் செய்யபட்ட நற்பணிகளுக்கான பெயரை மட்டும் அவர் எடுத்துக்கொள்கிறார். முஸ்லீம்கள் இல்லாத இந்தியாவை உருவாக்க வேண்டும் என பாஜக விரும்புகிறது. ஆனால், இது ஒருபோதும் நடக்காது. முஸ்லீம் மக்களும் தலித் மக்களும் அநீதிகளுக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும் என்றார். #Owaisi | #Tripletalaqbill