முத்தலாக் மசோதாவிற்கு மக்களவையில் அதிமுக உள்பட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு

முத்தலாக் மசோதாவிற்கு மக்களவையில் காங்கிரஸ், திரிணாமுல்காங்கிரஸ், அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளன. #TripleTalaqBill
முத்தலாக் மசோதாவிற்கு மக்களவையில் அதிமுக உள்பட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு
Published on

புதுடெல்லி,

முஸ்லிம் பெண்கள் (திருமண உரிமைகள் பாதுகாப்பு) சட்டம்-2018 ஏற்கனவே நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டத்தின்படி முத்தலாக் முறையில் மனைவியை விவாகரத்து செய்வது சட்டவிரோதம் என்றும், இதன்மூலம் கணவருக்கு 3 வருடங்கள் ஜெயில் தண்டனை விதிக்கப்படலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது. இந்த சட்டமசோதா சில கட்சிகளின் எதிர்ப்பு காரணமாக மாநிலங்களவையில் நிறைவேற்றப்படாமல் நிலுவையில் இருந்தது.

இதில் மத்திய அரசு, விவாகரத்து செய்யும் கணவர்களுக்கு ஜாமீன் வழங்குவது உள்பட சில திருத்தங்களை செய்தது. ஆனாலும் மாநிலங்களவையில் நிறைவேற்றப்படவில்லை. இதனால் கடந்த செப்டம்பர் மாதம் இதற்காக திருத்தங்களையும் சேர்த்து ஒரு அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டது. இந்நிலையில் நாடாளுமன்ற கூட்டம் தொடங்கியதும் இந்த அவசர சட்டத்துக்கு மாற்றாக ஒரு புதிய மசோதாவை சட்ட மந்திரி ரவிசங்கர் பிரசாத் அறிமுகம் செய்தார். அமளிக்கு இடையே நாடாளுமன்றத்தில் முத்தலாக் முறைக்கு எதிராக புதிய மசோதா அறிமுகம் செய்யப்பட்டது. இதற்கு காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்தது.

மசோதா கடந்த 20ந் தேதி விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட இருந்தது. இதுதொடர்பாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, இந்த மசோதா மீதான விவாதத்தில் காங்கிரஸ் கட்சி கலந்து கொள்ள விரும்புகிறது, எனவே இந்த விவாதத்தை 27ந் தேதி எடுத்து கொள்ள வேண்டும் என்று சபாநாயகர் சுமித்ரா மகாஜனை கேட்டுக்கொண்டார். இது தொடர்பாக அவர் வாக்குறுதியும் அளித்தார். நாடாளுமன்ற விவகாரங்கள் துறை மந்திரி நரேந்திர சிங் தோமரும் இதை ஏற்றுக்கொண்டார்.

அதன்படி முத்தலாக் மசோதா, கிறிஸ்துமஸ் பண்டிகை விடுமுறை 5 நாட்களுக்கு பின்னர் இன்று மக்களவை கூடியதும் முத்தலாக் மசோதா விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

முத்தலாக் தடை மசோதாவை நாடாளுமன்ற சிறப்பு குழுவுக்கு அனுப்ப எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்துள்ளன. தற்போதைய நிலையில் மசோதாவை நிறைவேற்ற காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளன.

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுனே கார்கே பேசும் போது, இது ஒரு மிக முக்கியமான மசோதா ஆகும். இது குறித்து விரிவான ஆய்வு தேவை. இது ஓர் அரசியலமைப்பு விஷயம். பாராளுமன்ற குழுவுக்கு மசோதா அனுப்பப்பட வேண்டும் என்று நான் கோருகிறேன் என கூறினார்.

முத்தலாக் மசோதாவிற்கு மக்களவையில் அதிமுக கடும் எதிர்ப்பு தெரிவித்தது. மசோதாவை நாடாளுமன்ற தேர்வு குழுவுக்கு அனுப்ப அதிமுக கோரிக்கை வைத்துள்ளது.

முத்தலாக் மசோதாவிற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து மசோதா மீது விவாதம் நடத்த கூடாது என கோஷம் எழுப்பினர்.

முத்தலாக் மசோதாவிற்கு விளக்கம் அளித்து மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் பேசியதாவது:-

20 இஸ்லாமிய நாடுகள் முத்தலாக்கை தடை செய்து உள்ளன. இந்தியாவை போன்ற ஒரு மதச்சார்பற்ற நாட்டில் அது ஏன் முடியாது? அரசியலின் முனையிலிருந்து இதை பார்க்க கூடாது என்று நான் கோருகிறேன்.

இந்த மசோதா எந்தவொரு சமூகத்திற்கோ, மதத்திற்கோ, நம்பிக்கைக்கோ எதிரானது அல்ல. இந்த மசோதா பெண்களின் உரிமைகள் மற்றும் நீதி பற்றியது என கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com