

அகர்தலா
திரிபுராவில் நாளை(பிப் 18) சட்டமன்றத்தேர்தல் நடைபெறவுள்ளது.இதனால் மாநிலம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
திரிபுராவில் உள்ள 60 தொகுதிகளில் 59 தொகுதிகளுக்கு நாளை சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது.அதில் 20 தொகுதிகள் பழங்குடியினர்களுக்கான தனித்தொகுதிகளாகும். ஐந்து நாட்களுக்கு முன்னர் சிபிஐ எம் கட்சியின் வேட்பாளர் ராமேத்ரா நாராயண் இறந்ததன் காரணமாக, சாரிலாம் தொகுதியில் மார்ச் 12 ஆம் தேதி தேர்தல் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
கடந்த 25 வருடங்களாக ஆட்சி புரிந்து கொண்டிருக்கும் இடது முன்னணி கட்சிக்கு, அப்பகுதியில் பலம் பெற்று வரும் பா ஜ க அணி மிகப்பெரும் சவாலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் பாஜக சார்பில் நான்கு கட்டமாக தேர்தல் பேரணிகள் நடைபெற்றுள்ளது. பிரச்சாரத்தில் பிரதமர் மோடி உட்பட அக்கட்சியின் முக்கிய தலைவர்களான அமித் ஷா, நிர்மலா சீதாராமன் ,நிதின் கட்காரி, அருண் ஜெட்லி, யோகி ஆதித்யனாத் என முக்கிய தலைவர்கள் பங்கேற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஐந்து முறை முதல்வராக தொடர்ந்து ஆட்சி செய்து கொண்டிருக்கும் மனிகார் சர்கார் தலைமையிலான சிபிஐ எம் கட்சி 57 தொகுதிகளிலும்,அதன் கூட்டணிக் கட்சிகளான கம்யூனிஸ்ட்,பார்வர்டு ஃப்ளாக்,ஆர் சி பி அணிகள் தலா ஒரு தொகுதியிலும் போட்டியிடுகின்றன. இதே போல் பாஜக 51 தொகுதிகளிலும்,அதன் கூட்டணிக்கட்சியான திரிபுரா சுதேச மக்கள் கட்சி 9 தொகுதிகளிலும் களம் இறங்கியுள்ளன.59 தொகுதிகளில் தனித்து போட்டியிடும் காங்கிரஸ் கட்சி காக்ராபோன் தொகுதியில் போட்டியிடாமல் உள்ளது.
இதனிடையே திரிபுராவின் முதன்மை தேர்தல் அதிகாரி ஸ்ரீராம் தரனிகாண்டி கூறுகையில்,மொத்தம் 25,73,413 பேர் தேர்தலில் வாக்களிக்கத் தகுதியுடையவர்கள்.அதில் 13,05,375 ஆண் வாக்காளர்களும்,12,68,027 பெண் வாக்காளர்களும்,11 மூன்றாம் பாலித்தவர்களும் இருக்கின்றனர்.இம்முறை 47,803 புதிய வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.மொத்தம் 3,214 தேர்தல் மையங்களில் காலை 7 மணிக்கு தொடங்கும் வாக்குப்பதிவு மாலை 4 மணிக்கு நிறைவு பெறும் எனத் தெரிவித்தார்.