திரிபுரா உள்ளாட்சி தேர்தல்: 90 சதவீத இடங்களில் பா.ஜனதா வெற்றி

திரிபுரா உள்ளாட்சி தேர்தலில் 90 சதவீத இடங்களில் பா.ஜனதா வெற்றிபெற்றுள்ளது.
திரிபுரா உள்ளாட்சி தேர்தல்: 90 சதவீத இடங்களில் பா.ஜனதா வெற்றி
Published on

அகர்தலா,

பா.ஜனதா ஆளும் திரிபுராவில் உள்ளாட்சி தேர்தல் 3 கட்டமாக நடக்கிறது. இதில் மொத்தமுள்ள 3,207 கிராம பஞ்சாயத்து வார்டுகளிலும் பா.ஜனதா, வேட்பாளர்களை நிறுத்தி உள்ளது. ஆனால் பிரதான எதிர்க்கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு 115 வார்டுகளிலும், காங்கிரஸ் 120 வார்டுகளிலும் வேட்பாளர்களை நிறுத்தி உள்ளன. பா.ஜனதாவின் கூட்டணி கட்சியான ஐ.பி.எப்.டி. 63 இடங்களுக்கும், சுயேச்சைகள் 6 இடங்களுக்கும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளன.

இதைப்போல 161 பஞ்சாயத்து யூனியன் காலியிடங்களிலும் பா.ஜனதா வேட்பாளர்களை நிறுத்தி உள்ளது. ஆனால் எதிர்க்கட்சிகள் சார்பில் 20 இடங்களில் மட்டுமே வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். மாவட்ட பஞ்சாயத்துகளை பொறுத்தவரை 18 இடங்களிலும் பா.ஜனதா வேட்பாளர்கள் போட்டியிடும் நிலையில், அதை எதிர்த்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மட்டும் 1 இடத்துக்கு வேட்பாளரை நிறுத்தி உள்ளது.

இவ்வாறு 90 சதவீதத்துக்கும் மேற்பட்ட காலியிடங்களில் பா.ஜனதா வேட்பாளர்கள் மட்டுமே போட்டியிடுவதால், அந்த வேட்பாளர்களின் வெற்றி உறுதியாகி இருக்கிறது. இந்த தேர்தலில் தங்கள் கட்சியினரை பங்கேற்க விடாமல் பா.ஜனதா சதி செய்வதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன. பா.ஜனதாவின் கூட்டணி கட்சியான ஐ.பி.எப்.டி.யும் இந்த குற்றச்சாட்டை வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

X

Daily Thanthi
www.dailythanthi.com