

புதுடெல்லி,
டெல்லியில், இந்தியா கேட் வளாகத்தையொட்டி, 40 ஏக்கர் பரப்பளவில் ரூ.176 கோடி செலவில் போர் நினைவு சின்னம் அமைக்கப்பட்டுள்ளது.
அதில், பலியான 25 ஆயிரத்து 942 ராணுவ வீரர்களின் பெயர்கள் கிரானைட் கற்களில் தங்க எழுத்துகளால் பொறிக்கப்பட்டுள்ளது. பிரமாண்ட ஸ்தூபியும், அணையா தீபமும், இந்திய ராணுவம் ஈடுபட்ட முக்கிய போர்களை விளக்கும் 6 சுவர் ஓவியங்களும் இடம்பெற்றுள்ளன. பிரதமர் மோடி, இந்த போர் நினைவு சின்னத்தை திறந்து வைத்து நாட்டுக்கு அர்ப்பணித்தார். அதை குறிக்கும் வகையில், அவர் தீபத்தை ஏற்றிவைத்தார். அப்போது, ஹெலிகாப்டரில் இருந்து ரோஜா பூக்கள் தூவப்பட்டன.
இந்த நிகழ்ச்சியில், முன்னாள் ராணுவத்தினர் மற்றும் அவர்களுடைய குடும்பத்தினரிடையே பிரதமர் மோடி பேசினார். அவர் பேசியதாவது:
முன்னாள் ராணுவத்தினர் மற்றும் ராணுவத்தினரின் குறைகளை தீர்க்க ஆன்லைன் முறை அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. எனவே, அவர்கள் ஒவ்வொரு இடத்துக்கும் அலைய வேண்டியது இல்லை. இந்த நினைவு சின்னம் கட்ட 60 ஆண்டுகளுக்கு முன்பே திட்டமிட்டும், முந்தைய அரசுகளின் அலட்சியம் காரணமாக தாமதம் ஆனது. இது, உயிர்த்தியாகம் செய்த ராணுவ வீரர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி ஆகும்.
படைவீரர்களின் நலன்களையும், பாதுகாப்பையும் முந்தைய மன்மோகன் சிங் அரசு அலட்சியம் செய்தது. குண்டு துளைக்காத 1 லட்சத்து 86 ஆயிரம் உடைகள் வாங்க 2009ம் ஆண்டு கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால், 2014ம் ஆண்டுவரை மன்மோகன் சிங் அரசு எதுவுமே செய்யவில்லை. நாங்கள் ஆட்சிக்கு வந்த பிறகுதான், 2 லட்சத்து 30 ஆயிரம் உடைகள் வாங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
சிலர், குடும்பமே முதலில் என்று செயல்படுகிறார்கள். ஆனால், நான் இந்தியாவே முதலில் என்று செயல்பட்டு வருகிறேன்.
ரபேல் போர் விமானங்களை இந்தியாவுக்கு வர விடாமல் தடுக்க சிலர் கூடுதல் நேரம் பணியாற்றி வருகிறார்கள். ஆனால், ரபேல் விமானங்கள் இந்தியாவுக்கு வந்து பறக்கத் தொடங்கும்போது அவர்கள் வாயடைத்து போவார்கள்.
இவ்வாறு மோடி பேசினார்.
இந்த நிகழ்ச்சியில், ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன் பேசுகையில், இந்த நினைவு சின்னம், மற்றொரு ஆன்மிக தலமாக இருக்கும். ஒவ்வொரு இந்தியரும் இங்கு வந்து, வீர மரணம் அடைந்த வீரர்களுக்கு மரியாதை செலுத்துவார்கள் என்று கூறினார்.