

லக்னோ,
உத்தரபிரதேசத்தில் லாரியில் கடத்தி வரப்பட்ட ரூ. 1 கோடி மதிப்புள்ள கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.
ஒடிசாவில் இருந்து உத்தரபிரதேசம் வழியாக டெல்லிக்கு கஞ்சா கடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் உத்தரபிரதேசத்தின் சோன்பத்ரா மாவட்டம் கங்க்வார் கிராம சோதனைச்சாவடியில் போலீசார் இன்று அதிரடி சோதனை நடத்தினர். அப்போது, அங்கு வந்த லாரியை மறித்து சோதனை நடத்தினர்.
உடனடியாக லாரியில் இருந்த டிரைவர் உள்பட 2 பேர் அங்கிருந்து தப்பியோட முயற்சித்தனர். இருவரையும் விரட்டிப்பிடித்த போலீசார், லாரியில்சோதனை நடத்தினர். அப்போது லாரியில் 1 கோடி ரூபாய் மதிப்புள்ள 220 கிலோ கஞ்சா இருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர்.
இதையடுத்து, கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், கஞ்சாவை கடத்தி வந்த 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். கஞ்சாவை ஒடிசாவில் இருந்து டெல்லிக்கு கொண்டு சென்றதாகவும் 2 பேரும் ஒப்புக்கொண்டனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், இந்த போதைப்பொருள் கடத்தலில் தொடர்புடைய நபர்கள் குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.