நாக்பூர் : 2 பழக்கடை வியாபாரிகள் அடித்துக் கொலை; மூன்று பேர் கைது

வாக்குவாதம் முற்றி வன்முறையாக வெடித்து 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
நாக்பூர் : 2 பழக்கடை வியாபாரிகள் அடித்துக் கொலை; மூன்று பேர் கைது
Published on

மும்பை,

மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் இந்த கொடூர சம்பவம் நடைபெற்றது.

புதவார் பஜார் சந்தை

மகாராஷ்டிரா மாநிலம், பஜ்ரங் நகரைச் சேர்ந்தவர்கள் ஆதித்யா என்ற சோனு போட்வே (வயது 25) மற்றும் தாது என்ற ஆதித்யா ராகுல்கர். இவர்கள் 2 பேரும் பழ வியாபாரிகள். சக்கர்தரா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கோண்ட் மொஹல்லாவின் ஒரு கல்லூரிக்கு அருகிலுள்ள புதவார் பஜார் சந்தையில் பழக்கடை வைத்து வியாபாரம் நடத்தி வந்தனர்.

அடித்துக் கொலை

நேற்று மாலை பழக்கடை வேலை தொடர்பாக வைபவ் என்ற தாது பிரதீப் ராவ் டோங்ரே (30), வேதாந்த் என்ற டப்பா அஜய் டபீர் (20) மற்றும் அபிஷேக் என்ற தாத்யா உத்தம் ராவத் (26) ஆகியோருக்கும் 2 பழக்கடை வியாபாரிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. சற்று நேரத்தில் வாக்குவாதம் வெடித்து பெரிய வன்முறையாக மாறியது. அப்போது ஆத்திரம் அடைந்த தாது பிரதீப் ராவ் டோங்ரே உட்பட 3 பேரும் சேர்ந்து பழக்கடை வியாபாரிகளான ஆதித்யா என்ற சோனு போட்வே மற்றும் தாது என்ற ஆதித்யா ராகுல்கர் ஆகியோரை செங்கல், கற்கள் மற்றும் கூர்மையான ஆயுதத்தால் தாக்கினர். இதனால் தலையில் பலத்த காயமடைந்த பழ வியாபாரிகள் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தனர்.

3 பேர் கைது

இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது. தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். இதனைத்தொடர்ந்து கொலயாளிகளான 3 பேரை போலீசார் அடையாளம் கண்டு அவர்களை பிடிக்க முயன்றனர்.எனவே, குற்றவாளிகள் அங்கிருந்து தப்பி ஓடினர். ஆனால் போலீசார் அவர்களை பின்தொடர்ந்து விஹிர்காவ்ன் பகுதியில் மடக்கிப்பிடித்து கைது செய்தனர். இதனைத் தொடர்ந்து அவர்கள் சக்கர்தாரா போலீசிடம் ஒப்படைக்கப்பட்டு, அவர்கள் மீது கொலைவழக்கு பதிவு செய்யப்பட்டது. மேலும் காவல் துறையினர் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகுன்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com