

கொல்கத்தா,
மேற்கு வங்காள மாநிலம் கங்சாபதி ஆற்றங்கரையில் இரண்டு ஆண் யானைகள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட பயங்கர காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சமூக வலைதளங்களில் விலங்குகள் குறித்த வீடியோக்கள் மற்றும் சுவாரசியமான காட்சிகள் அடிக்கடி பகிரப்பட்டு வைரலாவது வழக்கம். அந்தவகையில், தற்போது மேற்கு வங்காளத்தில் எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று பார்ப்பவர்களை அதிர வைக்கும் வகையில் அமைந்துள்ளது.
அங்குள்ள கங்சாபதி ஆற்றின் கரையில் 2 மாபெரும் ஆண் யானைகள் திடீரென நேருக்கு நேர் நின்று பயங்கரமாக மோதிக்கொண்டன. சற்றும் சளைக்காமல் இரண்டு யானைகளும் மீண்டும் மீண்டும் தங்களது பலத்த தலைகளால் முட்டிக்கொண்டன. மேலும், தங்களது முழு பலத்தையும் திரட்டி ஒன்றை ஒன்று ஆக்ரோஷமாக தள்ளின.
யானைகள் கோபத்தில் போட்ட உரத்த பிளிறல் சத்தமும், அவற்றின் அதிரடி அசைவுகளும் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. சண்டை சத்தம் கேட்டு அருகில் இருந்த கிராம மக்கள் அலறியடித்துக்கொண்டு ஓடினர். எனினும், யானைகள் சண்டையிடும் தகவல் காட்டுத்தீ போல் பரவியதால், சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த நூற்றுக்கணக்கான பொதுமக்கள் அந்த இடத்தில் திரண்டனர். அவர்களில் பலரும் ஆபத்தை உணராமல், சற்று தொலைவில் நின்று கொண்டு யானைகளின் மோதலை தங்களது செல்போன்களில் வீடியோவாகப்பதிவு செய்தனர்.
ஒரு கட்டத்தில் 2 யானைகளும் சண்டையை நிறுத்திக்கொண்டன. பின்னர், அவை தனித்தனியாக பிரிந்து, மக்கள் கூடியிருந்த பகுதியை நோக்கியே வெவ்வேறு திசைகளில் நடந்து சென்றன.இதை கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் நாலாபுறமும் சிதறி ஓடினர். கோபத்தில் இருக்கும் யானைகள் தங்களை தாக்கிவிடுமோ என்ற பீதி இன்னும் அந்த கிராம மக்களிடையே விலகவில்லை. இந்த ஆக்ரோஷ வீடியோ தற்போது இணையத்தில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது.