தேரில் மின்சாரம் பாய்ந்து 2 மாணவர்கள் பலி.. ரத யாத்திரையில் நிகழ்ந்த துயரம்

மின்கம்பி மீது தேர் உரசியதால் ஏற்பட்ட மின்விபத்தை தொடர்ந்து, உள்ளூர் மக்கள் உடனடியாக மின் இணைப்பைத் துண்டித்தனர்.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் ரத யாத்திரையின்போது தேரில் மின்சாரம் பாய்ந்ததால் இரண்டு மாணவர்கள் உயிரிழந்தனர்.
Published on

குந்தி (ஜார்க்கண்ட்),

ஜார்க்கண்ட் மாநிலத்தில் ரத யாத்திரையின்போது தேரில் மின்சாரம் பாய்ந்ததால் இரண்டு மாணவர்கள் உயிரிழந்தனர்.

ஜார்க்கண்ட் மாநிலம் குந்தி மாவட்டம் தோர்பா பகுதியில் இன்று ஜெகநாதர் ரத யாத்திரை நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட தேரில் ஜெகநாதர் எழுந்தருளியதும், சிறப்பு பூஜைகள் செய்து தேர் வடம் பிடிக்கப்பட்டது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ஆர்வத்துடன் பங்கேற்று தேர் இழுத்தனர்.

முக்கிய வீதிகள் வழியாக சென்ற தேர், ஒரு இடத்தில் சென்றபோது, 11000 வோல்ட் மின்சாரம் பாயும் உயர் மின்னழுத்த கம்பி மீது உரசியது. இதனால் தேரில் திடீரென அதிக அழுத்த மின்சாரம் பாய்ந்தது. தேரை பிடித்தபடி உற்சாகத்துடன் வந்துகொண்டிருந்த மாணவர்கள், மின்சாரம் தாக்கியதால் தூக்கி வீசப்பட்டனர்.

மின் இணைப்பை துண்டித்த மக்கள்

இந்த மின்விபத்தைத் தொடர்ந்து அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது. உள்ளூர் மக்கள் உடனடியாக மின் இணைப்பைத் துண்டித்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

மின்சாரம் தாக்கியதில் 7 மாணவர்கள் காயமடைந்தனர். அவர்களை தோர்பா மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். பலத்த காயமடைந்து உயிருக்கு போராடிய 2 மாணவர்கள் அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக குந்தி சதார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். ஆனால், அங்கு செல்வதற்குள் இருவரும் உயிரிழந்துவிட்டனர். மற்றவர்கள் தோர்பா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த விபத்து குறித்து தோர்பா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com