இங்கிலாந்து பிரதமர் கீர் ஸ்டார்மர் இந்தியா வருகை

இரு தலைவர்களும் மண்டல மற்றும் உலகளாவிய முக்கியத்துவம் பற்றிய தங்களுடைய பார்வைகளை பகிர்ந்து கொள்வார்கள்.
புதுடெல்லி,
இங்கிலாந்து பிரதமர் கீர் ஸ்டார்மர் இந்தியா வருகை தந்துள்ளார். மும்பை வந்துள்ள கீர் ஸ்டார்மருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மும்பையில் பிரதமர் மோடியை கீர் ஸ்டார்மர் நாளை சந்தித்து பேசுகிறார். அப்போது இரு நாடுகளுக்கு இடையேயான வர்த்தகம், முதலீடு பற்றி ஆலோசிக்கப்பட உள்ளது. கீர் ஸ்டார்மர் பிரதமரான பின்னர் மேற்கொள்ளும் முதல் இந்திய பயணம் இதுவாகும்.
நாளை நடைபெறும் சந்திப்பில் இரு தலைவர்களும் மண்டல மற்றும் உலகளாவிய முக்கியத்துவம் பற்றிய தங்களுடைய பார்வைகளை பகிர்ந்து கொள்வார்கள். தொழில் நிபுணர்கள், கொள்கை வகுப்பாளர்கள் மற்றும் புதிய கண்டுபிடிப்பாளர்கள் ஆகியோருடனும் அவர்கள் பேச்சுவார்த்தை நடத்துவார்கள்.
இதேபோன்று, ஜியோ உலக மையத்தில் நடைபெற உள்ள 2025-ம் ஆண்டுக்கான 6-வது குளோபல் பின்டெக் திருவிழாவில் இருவரும் பங்கேற்று நிகழ்ச்சியில் முக்கிய உரையாற்ற உள்ளனர். இதில் 75-க்கும் மேற்பட்ட நாடுகளை சேர்ந்த 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய மற்றும் சர்வதேச அளவில் 7,500-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள், 800 பேச்சாளர்கள், 400 காட்சிப்படுத்துவோர் மற்றும் 70 ஒழுங்குமுறையாளர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.






