

புதுடெல்லி,
பாஜகவின் தேசிய செய்தித்தொடர்பாளராக இருந்தவர் ஷெசாத் பூனாவாலா, (38). வழக்கறிஞராக இருந்த ஷெசாத் பூனாவாலா 38, காங்கிரஸ் கட்சியில் இருந்து 2017ல் விலகி, பாஜகவில் சேர்ந்தார். 'டிவி' விவாத நிகழ்ச்சிகளில் பங்கேற்று, அக்கட்சியின் முகமாக மாறினார். சமீபத்தில், பாஜகவில் இருந்து விலகினார். அதன் பின் முதன்முறையாக தன் விலகலுக்கான காரணம் குறித்து நேற்று அவர் கூறியதாவது:
பாஜக உட்பட எந்த அரசியல் கட்சிகளும் தங்கள் செய்தித் தொடர்பாளர்களுக்கு சம்பளம் வழங்குவதில்லை; இதனால், என் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. வீட்டு வாடகை செலுத்தக்கூட முடியாத நிலையில் உள்ளேன். எனவே, விரைவில் தனியார் நிறுவனத்தில் பணியாற்ற உள்ளேன்.
நான், பாஜகவில் இருந்து விலகியதற்கு எனக்குள்ள நிதி நெருக்கடியே முக்கிய காரணம். அக்கட்சியின் கொள்கைக்கோ அல்லது பிரதமர் மோடியின் தொலைநோக்குப் பார்வைக்கோ அர்ப்பணிப்புடன் செயல்பட, நான் அக்கட்சியில் ஒரு பதவியில் இருக்க வேண்டிய அவசியமில்லை.
நான், காங்கிரசில் சேரப் போவதாக சிலர் கூறுகின்றனர். அப்படி அக்கட்சியில் சேர வேண்டுமெனில்,ராகுல், சோனியா, பிரியங்கா ஆகியோரை நீக்க வேண்டும். முன்னாள் பிரதமர் நேருவின் செயல்பாடுகளுக்கு அக்கட்சி மன்னிப்பு கேட்க வேண்டும். பிரதமர் மோடியை விட சிறந்த தலைவர், இந்த நாட்டிற்கு இதுவரை கிடைத்தது இல்லை. இனி கிடைக்கப்போவதும் இல்லை. தற்போதைய நிலையில், நம் நாட்டிலேயே மிகச்சிறந்த கட்சி பாஜகதான்.”
இவ்வாறு அவர் கூறினார்.