

புதுடெல்லி,
பிரதமர் மோடி மத்தியில் 3-வது முறையாக ஆட்சி அமைத்து விரைவில் ஓராண்டு நிறைவு பெற உள்ளது. இதையொட்டி நாளை மறுநாள் 4-ம் தேதி பிரதமர் மோடி மத்திய மந்திரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார். பாகிஸ்தான் மீது இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் தாக்குதல் நடத்திய பிறகு மத்திய மந்திரிகளை பிரதமர் மோடி சந்திக்க இருப்பது இதுவே முதல் முறையாகும்.
இந்த கூட்டத்துக்கு வரும் மத்திய மந்திரிகள் தங்களது துறையின் திட்டங்கள், நிதி ஒதுக்கீடுகள், நிலுவையில் இருக்கும் பிரச்சினைகள் போன்றவற்றை தயாராக எடுத்து வருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். எனவே பிரதமர் மோடி மத்திய மந்திரி களுடன் துறை ரீதியாக மிக விரைவான ஆலோசனை நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை குறித்த விவரங்கள் இந்த கூட்டத்தில் மந்திரிகளுக்கு வழங்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.