

புதுடெல்லி,
மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் செப்டம்பர் 2-ந்தேதி(இன்று) மற்றும் 3-ந்தேதி ஆகிய 2 நாட்கள் அரசுமுறைப் பயணமாக இலங்கைக்கு செல்ல உள்ளார். இந்த பயணத்தின் போது இரு நாடுகளுக்கு இடையிலான பாதுகாப்பு உறவுகளை மேம்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இலங்கைக்கு செல்லும் மத்திய மந்திரி ராஜ்நாத் சிங், அந்நாட்டின் அதிபரும், பாதுகாப்புத்துறை மந்திரியுமான ரணில் விக்கிரமசிங்கே மற்றும் பிரதமர் தினேஷ் குணவர்தனா ஆகியோரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். மேலும் இலங்கையில் உள்ள நுவரெலியா மற்றும் திருகோணமலை ஆகிய இடங்களுக்கும் ராஜ்நாத் சிங் பயணம் மேற்கொள்ள உள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.