

புதுச்சேரி,
புதுச்சேரியில் நேற்று புதுப்பிக்கப்பட்ட, புகழ்பெற்ற பழைய கலங்கரை விளக்கத்தை திறந்து வைத்து மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பேசியதாவது :-
புதுச்சேரி என்பது தமிழ், பிரெஞ்சு, இந்தியர், கடல்சார்ந்த மற்றும் உலகளாவிய தாக்கங்களின் சங்கமமாகும் என்று அவர் கூறினார். பழைய கலங்கரை விளக்கத்தை மீட்டெடுப்பதற்கான மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியத்தின் முடிவு, நிறுவன பெருமிதத்தையும் பொது பாரம்பரியத்தின் மீதான பொறுப்புணர்வை காட்டுவதோடு, கலாச்சாரம் மற்றும் நினைவுகளின் பாதுகாவலர்களாக அரசு துறைகள் இருக்க முடியும் என்பதையும் இது காட்டுகிறது என்று அவர் தெரிவித்தார்.
பழைய கலங்கரை விளக்கம் 1836 முதல் நிலைத்து நிற்கிறது என்பதை சுட்டிக்காட்டிய நிதி மந்திரி, புதுப்பிக்கப்பட்ட இந்த பழைய கலங்கரை விளக்கத்தின் மூலம், புதுச்சேரியின் கடல்சார் வரலாறு, பழக்கவழக்கங்களின் பாரம்பரியம், வருங்கால சந்ததியினருக்காக பாரம்பரியத்தை பாதுகாப்பதில் இந்தியாவின் பரந்த அர்ப்பணிப்பு ஆகியவற்றுடன் தொடர்புடைய ஓர் அடையாள சின்னத்தை நாம் புதுப்பிக்கிறோம் என்று பொருள் என தெரிவித்தார்.
ஒரு காலத்தில் கடலின் நிச்சயமற்ற தன்மைகளுக்கு மத்தியில் கப்பல்களுக்கு கலங்கரை விளக்கம் வழிகாட்டியது போல், இன்று நவீன பொருளாதாரத்தின் சிக்கல்களுக்கு மத்தியில் பொருளாதார நிறுவனங்கள் வர்த்தகத்திற்கு வழிகாட்டுகின்றன என்று அவர் கூறினார். அவை நிலையானதாகவும், நேர்மையாகவும், சேவை மனப்பான்மையுடனும் இருக்க வேண்டும். அரசு நிறுவனங்கள் கொண்டிருக்க வேண்டிய கடமை, விழிப்புணர்வு, சேவை, நிலைத்தன்மை ஆகிய விழுமியங்களை புனரமைக்கப்பட்ட இந்த கலங்கரை விளக்கம் நினைவூட்டுகிறது என்று மந்திரி தெரிவித்தார்.
கலங்கரை விளக்கத்தின் பெருமையை மீட்பதில் மேற்கொண்ட முயற்சிகளுக்காக மத்திய பொதுப்பணி துறையையும் இந்திய தேசிய கலை மற்றும் கலாச்சார பாரம்பரிய அறக்கட்டளையையும் பாராட்டிய நிதி மந்திரி, இந்த வெற்றிகரமான புனரமைப்பு, இந்தியா முழுவதும் மேற்கொள்ளப்படும் இதுபோன்ற முயற்சிகளுக்கு ஒரு முன்மாதிரியாக அமையும் என்றார்.
இந்த நிகழ்ச்சியில் புதுச்சேரி யூனியன் பிரதேசத் துணைநிலை கவர்னர் கைலாசநாதன், முதல்-மந்திரி என். ரங்கசாமி, நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் செல்வகணபதி மற்றும் மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியத்தின் அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.