

புதுடெல்லி,
இந்தியாவில் கடந்த சில நாட்களாக தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை மிக வேகமாக அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் 1,94,720 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. கொரோனா பாதிப்பால் உயிரிழப்பு குறைவாக இருந்தாலும், உருமாற்றம் அடைந்த ஒமைக்ரான் உள்ளிட்ட தொற்று பரவல் காரணமாக பல மாநிலங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.
இந்த நிலையில் மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு மத்திய சுகாதாரத்துறை செயலாளர் எழுதியுள்ள கடிதத்தில், மாநிலங்களில் குறைந்தபட்சம் 48 மணி நேரத்திற்கு தேவையான மருத்துவ ஆக்சிஜனை கையிருப்பில் வைத்திருக்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
அதே போல திரவநிலை மருத்துவ ஆக்சிஜன் சிலிண்டர்களை தடையின்றி எடுத்து செல்லும் வகையில் நடவடிக்கை எடுக்க எனவும், மாநிலங்களில் உள்ள ஆக்சிஜன் கட்டுப்பாட்டு அறைகளை மீண்டும் புதுப்பிக்க வேண்டும் எனவும் மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு கொரோனா 2-வது அலையின் போது மருத்துவமனைகளில் மருத்துவ ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டன. இந்த ஆண்டு தற்போது மீண்டும் கொரோனா அதிகரித்து வரும் நிலையில், ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்படாத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மருத்துவமனைகளில் ஆக்சிஜன் இருப்பை உறுதி செய்ய வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.