

பெங்களூரு,
பெங்களூரு-மைசூரு இடையே ரூ.40 கோடி செலவில் 130 கிலோ மீட்டருக்கு இரட்டை ரெயில் பாதை அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. இந்த பணிகள் பாதியளவு நிறைவு பெற்று உள்ளன. தற்போது இரட்டை ரெயில் பாதை அமைக்கும் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன. இரட்டை ரெயில் பாதை அமைக்கப்பட்ட இடங்களில் சோதனை ஓட்டமும் நடந்து வருகின்றன.
இந்த நிலையில் பெங்களூரு-மைசூரு இரட்டை ரெயில் பாதை தரமான முறையில் அமைக்கப்பட்டு வருவதாக மத்திய ரெயில்வே மந்திரி பியூஸ் கோயல் கூறி உள்ளார்.
இதுகுறித்து ரெயில்வே மந்திரி பியூஸ் கோயல் தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-
பெங்களூரு-மைசூரு இடையே அமைக்கப்படும் இரட்டை ரெயில் பாதையில் என்ஜின் மூலம் சோதனை ஓட்டம் நடந்தது. அப்போது என்ஜினீல் ஒரு டம்ளரில் தண்ணீர் வைக்கப்பட்டு இருந்தது. என்ஜின் அதிவேகமாக இயக்கப்பட்ட போதிலும் டம்ளரில் இருந்து ஒரு சொட்டு தண்ணீர் கூட சிந்தவில்லை. இதன்மூலம் அந்த இரட்டை ரெயில் பாதை எவ்வளவு தரமாக அமைக்கப்பட்டு உள்ளது என்பது தெரிகிறது.
இவ்வாறு அவர் கூறி இருந்தார்.
மேலும் ரெயில் என்ஜின் இயக்கப்பட்ட போது டம்ளரில் இருந்த தண்ணீர் சிந்தாமல் இருந்த வீடியோவும், பியூஸ் கோயல் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு உள்ளார்.