

புதுடெல்லி,
நொறுக்குத் தீனிகளை சாப்பிடுவதாலும், இனிப்பான குளிர்பானங்களை அருந்துவதாலும் கல்லூரி மாணவமாணவிகள் உடல் பருமன் அதிகரித்து பல்வேறு நோய்களுக்கு ஆளாவது மருத்துவ ஆய்வில் தெரிய வந்துள்ளது. இந்த தகவல் மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தின் கவனத்துக்கும் கொண்டு செல்லப்பட்டது.
இதைத்தொடர்ந்து அந்த அமைச்சகம் உயர் கல்வி நிறுவனங்களில் நொறுக்குத் தீனி வகை உணவு பண்டங்கள் மற்றும் இனிப்பு அதிகம் கலந்த குளிர்பானங்கள் போன்றவற்றின் விற்பனையை தடை செய்வதற்கான நடவடிக்கையை எடுக்கவேண்டும் என்று பல்கலைக்கழக மானியக் குழுவான யு.ஜி.சி.க்கு அறிவுறுத்தி இருந்தது.
இதையடுத்து, பீசா, பர்கர், சிப்ஸ், கேக்குகள், குக்கீஸ், வறுத்த துரித வகை உணவுகள், கார்பன் ஏற்றம் செய்யப்பட்ட இனிப்பான குளிர்பானங்கள் போன்றவற்றை தனது வரையறைக்கு உட்பட்ட பல்கலைக்கழக மற்றும் கல்லூரி வளாகங்களில் விற்பனைக்கு தடை விதித்து யு.ஜி.சி. உத்தரவிட்டது.
அதே நேரம் மாணவர்கள் நல்ல உடல் நலத்துடன் திகழ்வதற்கு ஏற்ற உணவு பண்டங்களை மட்டுமே விற்று அவர்கள் உடல் பருமன் குறைந்து சிறந்த முறையில் வாழ்வதற்கு விழிப்புணர்வையும் ஏற்படுத்த வேண்டும் என்றும் அந்த உத்தரவில் கூறப்பட்டு உள்ளது.