சர்வதேச எல்லை பகுதியில் அத்துமீறி பறந்த ஆளில்லா விமானம்; காஷ்மீரில் பரபரப்பு

காஷ்மீரில் சர்வதேச எல்லை பகுதியில் இன்று அதிகாலையில் அத்துமீறி நுழைந்த ஆளில்லா விமானம் மீது பி.எஸ்.எப். வீரர்கள் துப்பாக்கி சூடு நடத்தினர்.
சர்வதேச எல்லை பகுதியில் அத்துமீறி பறந்த ஆளில்லா விமானம்; காஷ்மீரில் பரபரப்பு
Published on

ஜம்மு,

ஜம்மு மற்றும் காஷ்மீரின் சர்வதேச எல்லை பகுதியில் எல்லை பாதுகாப்பு படையினர் (பி.எஸ்.எப்.) உள்ளிட்ட வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவது வழக்கம்.

இந்த நிலையில், ஆர்னியா பிரிவில் அமைந்துள்ள சர்வதேச எல்லை பகுதியில் இன்று அதிகாலையில் 4.30 மணியளவில் வானில் மின்னும் ஒளியுடன் ஒரு பொருள் தோன்றியது.

அது ஆளில்லா விமானம் என சந்தேகிக்கப்படுகிறது. இதனை தொடர்ந்து, இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த அதன் மீது பி.எஸ்.எப். வீரர்கள் துப்பாக்கி சூடு நடத்தினர்.

இதனை தொடர்ந்து அந்த ஆளில்லா விமானம் திரும்பி சென்றது. இதனை பி.எஸ்.எப். படையினர் உறுதி செய்துள்ளனர். சமீப நாட்களாக காஷ்மீரில் இந்துக்கள், காஷ்மீரி பண்டிட்டுகள் உள்ளிட்டோர் மீது பயங்கரவாத தாக்குதல் நடந்து வருகிறது.

இந்த தாக்குதல்களை நடத்துவதற்கு கடந்த ஆண்டு செப்டம்பரிலேயே பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. உளவு அமைப்பு சதி திட்டம் தீட்டியிருந்தது என்று இந்திய உளவு அமைப்பு சமீபத்தில் தகவல் தெரிவித்து இருந்ததும் குறிப்பிடத்தக்கது.

X

Daily Thanthi
www.dailythanthi.com